பக்கம் எண் :

150கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

செலவழித்த கண்ணீரையும் அவள் உள்ளக் குமுறலிலிருந்து எழும்பிய சோகக் குரலையும் பற்றி யாரும் பேசவும் இல்லை. ஏன்? எண்ணவும் இல்லை. அந்த மக்கள் கூட்டம் இதைத்தானா புதிதாகப் பார்க்கிறது. பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன கண்களல்லவா அந்தக் கண்கள்! ஆனாலும் அவ்வளவு பெரிய கூட்டத்தில் இரண்டு இளைஞர்களின் உள்ளங்கள் மட்டும், உள்ளக் கருத்து களைச் சொல்லாமற் சொல்லிக் கொண்டிருந்த அவள் கண்களைப் பார்த்துப் பரிவு கொண்டு துடித்துக் கொண்டுதான் இருந்தன.

ஓர் உள்ளம் சொல்லிற்று:- "இதென்ன அநியாயம்! பெண்ணுக்கு வயது பதின்மூன்று. அவனுக்கு வயது அய்ம்பத்து மூன்று. எவ்வளவு வேற்றுமை! பணத்திமிர்தானே இப்படியெல்லாம் செய்யச் சொல்லு கிறது?" என்று.

அதற்கு மற்றோருள்ளம், "இல்லை இல்லை; பெண்ணின் அப்பனது பணஆசை தான் அப்படிச் செய்யச் சொல்லிற்று. இன்னும் பார்க்கப் போனால் சமுதாயத்தில் நிறைந்துள்ள முட்டாள் தனந்தான் அடிப்படைக் காரணம் என்று நான் சொல்வேன். இத்தகைய அறியாமையின் ஆணிவேர் களையப் படும் வரை, பெண்களின் வாழ்வு சிதைந்த வாழ்வுதான்; செல்லரித்து உளுத்துப் போன வாழ்வுதான்" என்று கூறிற்று.

ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தின் இரைச்சலிலே, இந்த இளம் உள்ளங்களின் துடிப்பு - அந்தத் துடிப்பிலிருந்து மேலெழும்பும் பெருமூச்சு யார் செவியில் விழப்போகிறது? விழுந்தாலும் அந்த மூச்சிலே தோய்ந்துள்ள வெப்பத்தை அறிந்துகொள்ளும் உணர்ச்சி ஏது அக் கூட்டத்திற்கு?

*****

"ங்களம்! ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? அந்த அலமாரியில் குங்குமப்பூ இருக்கிறது அதை எடுத்துப் பாலில் கொஞ்சம் போட்டு எடுத்துக் கொண்டு வா!"

மங்களம் என்பது முதலியார் மனைவியின் பெயர். அந்தப் பெண்ணும் அப்படியே எடுத்து வந்தாள்.

"இதோபார்! வைரச் சங்கிலி, இதைக் கழுத்தில் போட்டுக் கொள்! இந்தா சாவிக்கொத்து; இது நகைப் பெட்டகத்தின் சாவி. எந்த நகை வேண்டுமோ எவ்வளவு பணம் வேண்டுமோ உன் விருப்பப்படி எடுத்துக் கொள்! நீதான் இங்கு அரசி!"