இன்பத்தை - மனித இன்பத்தை என்னிடம் காண முடியவில்லை. அதனால் அஃது இருக்கும் இடத்தை நாடினாள். அவனும் இளைஞன், மணம் ஆகாதவன். இஃது அவர்கள் குற்றமன்று. என் குற்றந்தான். இது சரியான தண்டனைதான்" என்ற நிலைக்கு வந்தார். "இருந்தாலும் இப்படிச் செய்யலாமா? தாய் - மகன் என்ற முறையாவது கருத வேண்டாமா?" "முறை! என்ன முறை! அவன் எனக்குத்தானே மகன். அவளுக்கும் அவனுக்கும் என்ன உறவு வந்தது? ஒரு கயிற்றை நான் கழுத்தில் கட்டியதற்காக அவள் தாயாக முடியுமா?" "இல்லையில்லை! இதுசரி என்று ஒப்புக் கொள்ளவே மாட்டேன். அவள் குற்றவாளிதான் அவளை இப்பொழுதே..." "வேண்டாம்! உன்னைத்தான் தூற்றும் உலகம். அவளைத் தூற்றாது. இயற்கை எண்ணம் - உணர்ச்சி இவற்றைக் கட்டுப் படுத்த முடியுமா? அதை அடக்க உன்னிடம் தான் ஆற்றல் இருக் கிறதா? வயதான உன்னிடமே இல்லாதபோது வாலிப உள்ளத்திலே எப்படி அதை எதிர்ப்பார்க்க முடியும்? ஆகவே நீ எண்ணுவது போல் செய்துவிடாதே! அவளை மணந்து கொண்டதே பெருங் குற்றம். மேலும் கொலைக்குற்றத்திற்கு ஆளாகாதே!" இப்படியாக நொந்து நொந்து அல்லற்பட்டுக் கொண் டிருந்தது அவருள்ளம். "வெந்நீர் காய்ந்து கொதிக்கிறதே; என்ன செய்கிறீர்கள்; குளிக்க எழுந்து வாருங்கள்" என்று சொல்லிக் கொண்டே மாடியில் ஏறி வந்து கொண்டிருந்தாள் மங்களம். ஒரு வகையில் மனத்தை - முகத்தைச் சரிப்படுத்திக் கொண்டு எழுந்தார். அன்று முதல் அவர் பைத்தியம் பிடித்தவர் போலவே காணப்பட்டார். அவருக்கு முகத்தில் தாடி வளர்ந்து கொண்டு வந்தது போலவே வேரூன்றி முளைத்தெழுந்த அந்த எண்ணமும் வளர்ந்து கொண்டே வந்தது. மாடிப்பக்கம் செல்வதே கிடையாது. ஒரு தனி அறையில் படுத்துக் கொள்வார். முதலியாரின் மாற்றம் மங்களத்திற்கு மனத்தடுமாற்றத்தைத் தந்தது. மற்றொரு நாள் இரவு மணி ஒன்று அல்லது இரண்டு இருக்கும். சிரிப்பொலி கேட்டது. அப்படியொன்றும் வெடித்த சிரிப்பன்று. |