பக்கம் எண் :

174கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

சென்ற கடிதத்தில் ஆதரவற்று நிற்கிறேன், என்று எழுதி யிருந்தேன். ஒருவகையில் ஆதரவும் ஆறுதலும் கிடைத்தது. அவர் மேற்கொண்ட பொதுநலத் தொண்டில் இறங்கியுள்ளேன். தமிழ்க் கழகத்தார் பெண்பள்ளி ஒன்று நிறுவி அதில் என்னை ஆசிரியை யாக்கியுள்ளார்கள். அதில் பணியாற்றி வருவதால் மன ஆறுதல் அடைந்து வருகிறேன். இலக்கியங்களும் மெய்யழகனும் அவரில் லாக்குறையை நிறைவேற்றுகிறார்கள். என்னை சிங்கப்பூருக்கு வருமாறு எழுதியிருந்தாய். நான் சிங்கப்பூருக்கு வருவதாக இல்லை. இங்கேயே இருந்து இன்னும் பல பொதுப்பணி செய்ய விரும்பி யுள்ளேன். தம்பி தங்கை நலனுக்கு அடிக்கடி எழுதிக் கொண் டிருங்கள்.

வணக்கம்
காக்கை

படித்து முடித்தாள்.

"அவள் யார்?"

அவள் என் அக்காள். நாங்கள் சென்னையிலிருக்கும் பொழுது அவளுக்குக் கலியாணமாகிவிட்டது. கலியாண மானவுடனேயே நாங்கள் சிங்கப்பூருக்கு வந்துவிட்டோம்" என்றாள்.

அப்பொழுது என் மைத்துனன் "சுயமரியாதை கொள்!" என்று பாடிக்கொண்டே வந்தான்.

"வேலா! அந்தப் பாட்டைப் பாடாதே! நிறுத்து!" என்றேன்.

ஏன் இப்படிச் சொல்லுகிறீர்கள்? அந்தப் பாட்டென்றால் ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை? சொல்லுகிறேன், சொல்லு கிறேன் என்று ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்களே!" என்றாள் கமலம்.

"கமலம்! சொல்லுகிறேன் கேள்! எனது சொந்த ஊர் சென்னை. நானும் தமிழ் ஆசிரியன்தான். ஆனால் என் கொள்கை வேறு. அவன் கொள்கை வேறு. இதனாலே அவனைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை. மேலும் தமிழாசிரியர் கழகத்திலே செயலாளர் பதவி எனக்குக் கிடைக்கவேண்டியது. அவனுக்குக் கிடைத்து விட்டது. வெறுப்பும் பொறாமையும் சேர்ந்தன.

"ஒருநாள் அவன் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்தேன். திரும்ப அவன் அதை விளக்கிப் பேசினான். அவனுக்கே வெற்றி கிடைத்தது. தோல்வி, எனக்கு மிகுந்த அவமானத்தை உண்டாக்கியது.