பக்கம் எண் :

190கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

'கமலா! ஆம்! கமலாதான் அவள் பெயரும். நான் தான் 'குடும்பவிளக்கு' அனுப்பினேன். அவனுக்குப் பரிசாக!' என்றது என் உதட்டின் அசைவு.

'கமலா உன் கணவன் பெயர் கோபாலன் தானே!'

'ஆம்' என்றாள்.

அங்கிருக்க முடியவில்லை என்னால். குமுறியது என் மனம். குழம்பி விட்டது என் மூளை. எழுந்து சென்றுவிட்டேன். கடற்கரை யையும் மறந்து விட்டேன். ஆனால் கமலாவை மறக்கவில்லை. 'கமலா, கமலா!' என்று அடிக்கடி சொல்வதைக் கேட்ட என் நண்பர்கள் என்னைப் பைத்தியம் என்பார்கள். அவர்களுக்கென்ன தெரியும்? இன்று அவள் மேற் காதலில்லை. சகோதரி என்ற எண்ணமா? அப்படியுமில்லை. ஏதோ ஒருவித அன்பு! அவ்வளவு தான்!

அவள் என் குடும்ப விளக்காக விளங்க வேண்டுமென்று எண்ணினேன். ஆனால், அவள் அணைந்த விளக்கு. ஆனாலும் பரவாயில்லை. மீண்டும் ஒளிபெறச் செய்யலாம் என்று எண்ணினேன். அந்த ஆசையையும் அணைத்துவிட்டாள். அவள் என் நண்பன் மனைவி என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும் எப்படி விரும்பும் என் மனம்? நல்லவேளை அவளிடம் என் கருத்தைச் சொல்ல வில்லை. சொல்லியிருந்தால் என்ன வேதனைப்பட்டிருப்பாளோ? என் வாழ்வையும் அணைந்த விளக்காகி விட்டாள்.

(ஆசிரியர் முதன் முதல் எழுதிய கதை இது. 'அழகு' என்ற மாத இதழில் வெளிவந்தது)