9 அவமானச் சின்னம் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒன்று கூடி ஏற்படுத்தியது தான் அறிவு வளர்ச்சிக் கழகம்! முக்கியமாக மொழி, நாடு இவற்றின் முன்னேற்றங் கருதியே அது தொடங்கப்பட்டது. சமூகச் சீர்த்திருத்தங் களுக்காகவும் நன்முறையில் பாடுபட்டு வந்தது. மூடக் கொள்கை களை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணங்கொண்ட இளைஞர் களின் எண்ணிக்கை அதிகம் அக்கழகத்திலே. கண்ணப்பனும் ஓர் உறுப்பினனாகச் சேர்க்கப் பட்டான் அதில். நல்ல குணமுடையவன். அமைதியான தோற்றம், அன்புப்பார்வை, அறிவுத் திறமை - இவைகள் தாண்டவமாடும் அவனிடத்திலே. யாரிடத்திலும் அதிகமாகப் பேசமாட்டான். கல்லூரி மாடிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தான் கண்ணப்பன். மாடியில்தான் கழகம் இருந்தது. அங்கே எப்பொழுதும் நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருப்பார்கள். அரசியலைப்பற்றிப் பேச்சு நடக்கும். தலைவர்கள் சிலர் அவர்களுடைய பேச்சிலே, அகப்பட்டுக் கொண்டு திண்டாடு வார்கள். ஒரு தோழர் பாடுவார். ஒரு தோழர் ஆடுவார். சில சமயங்களில் அரட்டைக் கச்சேரியும் நடைபெறும். கண்ணப்பன் மேலே செல்லும் பொழுது நடந்து கொண்டிருந்தது அதே கச்சேரிதான். 'கண்ணப்பன்' என்ற சொல் காதில் விழுந்ததும் சட்டென்று நின்றுவிட்டான். உற்றுக்கேட்டான். "கண்ணப்பன் நம் கூட்டத்திலே அவமானச் சின்னம்! பெரிய அசடு." இச்சொற்கள் அவன் செவியில் விழுந்தன. விழுந்ததும் தலை 'கிர்' எனச் சுழல்வதுபோல இருந்தது அவனுக்கு. அவனால் அங்கு நிற்க முடியவில்லை. 'விர்' என்று கீழே இறங்கிவிட்டான். 'அவமானச் சின்னம்' 'அவமானச் சின்னம்' இச்சொற்கள் அவன் உள்ளத்தை அழுத்திக் கொண்டன. மூளையை இறுகப் பற்றிக் கொண்டன. அடிக்கடி அச்சொற்கள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. |