பக்கம் எண் :

26கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

பின்னர் அங்குமிங்கும் உலவினேன். மணி நான்காயிற்று. முதல் வண்டியில் ஏறிப் பெரியகுளம் வந்தடைந்ததும் கவிதையைப் படியெடுத்துக்கொண்டு அஞ்சல் நிலையம் சென்றேன். அன்று அஞ்சலிற் சேர்த்தால்தான் கடைசி நாளாகிய 22ஆம் தேதி அவர் களுக்குக் கிடைக்கும். ஆனால், காலை 11 மணிக்குக் கட்டெடுக்கப் பட்டுவிட்டதென்று கேள்விப்பட்டு வருத்தத்துடன் திரும்பினேன்.

வழியிற் கண்ட நண்பர் ஒருவர் விவரத்தைக் கேட்டு, அதனை வாங்கி, வெற்றிலைக் குன்று (வத்தலக்குண்டு) என்ற ஊரில் அஞ்சலிற் சேர்க்கச் செய்தார். உரிய நாளில் உரியவர்க்குச் சென்றடைந்தது. சில நாளில் 1950இல் 'திராவிட நாடு' இதழில் முடிவு வெளியிடப்
பட்டது. நாவலர் சோமசுந்தர பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப்புலவர் கா.அப்பா துரையார் மூவரும் நடுவராக இருந்த அப் போட்டியில் என் கவிதை முதன்மை பெற்றதாக அச் செய்தி கூறியது. பேருந்து நிலையத்திற் பிறந்த 'அழகின் சிரிப்பு' ஒரு சிறு வெள்ளிக் கிண்ணத்தை முதல் பரிசி லாகப் பெற்றுத் தந்தது. எனக்கு மகிழ்வைத் தந்த அதே கிண்ணம் எங்கள் வீட்டுக்குட் புகுந்த திருடனுக்கு ஒருநாள் உணவாக மாறியது. 'முடியரசன் கவிதைகள்' என்னும் நூலில் 'அழகின் சிரிப்பு' வெளிவந்துள்ளது.

பேருந்து நிலையத்திற் பிறந்த கவிதை 'அழகின் சிரிப்பு' இனி, பேருந்திலேயே பிறந்த கவிதையும் உண்டு. தென்னாட்டு இராசா ராம் மோகன்ராய் என்று சிறப்பித்துக் கூறப்பட்ட தமிழறிஞர் சொ.முருகப்பனார் இராமாயணத்தில் அளவு கடந்த ஈடுபாடு கொண்டவர். இராமகாதை என்ற பெயரில் திருத்த மான பதிப் பொன்று கொணர விரும்பிப் பெரிதும் முயன்று வந்தார். அதன் பொருட்டுப் பல்வேறு பதிப்புகளையும் ஏடுகளையும் துருவித் துருவி ஆய்ந்து வந்தார். தஞ்சை அரண்மனையில் சரசுவதி நூல் நிலையத்தில் மன்னரால் தொகுத்து வைக்கப் பட்டிருந்த ஏடுகளை அடிக்கடி சென்று ஆராய்ந்து வருவார். உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் நண்பருடன் உரை யாடும் பொழுதும் இதே சிந்தனை, இதே பேச்சு, சுருங்கக் கூறின் அல்லும் பகலும் அதே நினைவுதான்.

அவர் இப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நானும் புலவர் சிலரும் உடனிருப்பது வழக்கம். அக் காதையில் அவர்க் குள்ள ஈடுபாடும், திருத்தமான பதிப்பு வெளிவருவதற்காக அவர் பட்ட பாடும் என் உள்ளத்தில் நன்கு பதிவாகிவிட்டன. ஒரு கால் நானும்