பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

7
பாரதியின் பாட்டுத்தலைவன்

பாரதி வருகை

"செட்டிநாடு வட்டாரத்தில் உள்ள கானாடுகாத்தானில் சிறப்புற வாழ்ந்த வை.சு. சண்முகம் செட்டியார், நம் கவியரசர் பாரதியை ஆதரித்த வள்ளல்களுள் ஒருவர். இவருடைய அழைப்பின் பேரில், அவர் இல்லம் சென்று, அவரின் விருந்தினராகச் சில நாட்கள் தங்கியதும் உண்டு....

வை.சு.சண்முகம் செட்டியார் அவர்களின் அழைப்புக் கிணங்க முதல் முறையாகக் கானாடுகாத்தான் செல்லக் காரைக் குடியில் பாரதி வந்து இறங்கிய போதில், இந்த மதாபிமான சங்க நண்பர்கள் பாரதியைக் கண்டு மகிழ்ந்து அளவளாவியதுடன், அவருடைய பாடல்களைப் பாடக் கேட்டும் இன்புற்றனர். அதன் பின்னர், பாரதியை அவர்கள் கானாடுகாத்தான் செல்ல விடுத்தனர். பாரதி சில நாள்கள் கானாடுகாத்தானில் தங்கி யிருந்தார்."

சீனி. விசுவநாதன்
கலைமகள் தீபாவளி மலர் 1985

பாரதி பாடிய மனிதர்

பாரதியார், கானாடுகாத்தானில் தங்கியிருக்கும் பொழுது, ஒரு நாள் இன்ப மாளிகையில், அவர், கையைக் கட்டிக் கொண்டு விறைப்பாக அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந் தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சண்முகனார், 'ஏதாவது கவிதை பாடலாமே' என்றார்.

உடனே பாரதியார், 'கவிதை வேண்டும் போதெல்லாம் வராது; அது தானாக வரவேண்டும்' என்று விடையிறுத்து விட்டார்.

"கூட்டுக் களியினிலே - கவிதை
கொண்டுதர வேணும்"