பக்கம் எண் :

56கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

பாரதத னாதிபதி யெனநினையே
    வாழ்த்திடுவர் பாரில் உள்ளோர்;
ஈரமிலா நெஞ்சுடையோர் நினைக்கண்டால்
    அருள்வடிவம் இசைந்து நிற்பார்;
நேரறியா மக்களெலாம் நினைக்கண்டால்
    நீதிநெறி நேர்ந்து வாழ்வார்;
யாரறிவார் நின்பெருமை? யாரதனை
    மொழியினிடை அமைக்க வல்லார்?

பலநாடு சுற்றிவந்தோம்; பல்கலைகள்
    கற்றுவந்தோம்; இங்குப் பற்பல்
குலமார்ந்த மக்களுடன் பழகிவந்தோம்;
    பலசெல்வர் குழாத்தைக் கண்டோம்;
நிலமீது நின்போல்ஓர் வள்ளமையாம்
    கண்டிலமே, நிலவை யன்றிப்
புலனாரச் சகோரபட்சி களிப்பதற்கு
    வேறுசுடர்ப் பொருளிங் குண்டோ?

மன்னர்மிசைச் செல்வர்மிசைத் தமிழ்பாடி
    எய்ப்புற்று மனங்க சந்து
பொன்னனைய கவிதையினி வானவர்க்கே
    அன்றிமக்கட் புறத்தார்க் கீயோம்
என்னநம துளத்தெண்ணி இருந்தோம்மற்
    றுன்னிடத்தே இமையோர்க் குள்ள
வன்னமெலாங் கண்டுநினைத் தமிழ்பாடிப்
    புகழ்தற்கு மனங்கொண் டோமே.

மீனாடு கொடியுயர்த்த மதவேளை
    நிகர்த்தவுரு மேவி நின்றாய்
யா(ம்)நாடு பொருளைஎமக் கீந்தெமது
    வறுமையினை இன்றே கொல்வாய்
வானாடும் மண்ணாடுங் களியோங்கத்
    திருமாது வந்து புல்கக்
கானாடு காத்தநகர் அவதரித்தாய்,
சண்முகனாம் கருணைக் கோவே!

சித்தார்த்த - ஐப்பசி யரு.

1919, அக்டோபர் 31                                                                                                 சி.சுப்பிரமணிய பாரதி

கானாடுக்காத்தான்

'பொன் அனைய கவிதை' எனப் பாரதியார் கூறியது, இக்கவிதைக்கு மிகப்பொருந்தும்.

'ஒட்டிய புன் கவலை, பயம், சோர்வு என்னும் அரக்கரெல்லாம் ஒருங்கு மாய வெட்டி' எனக் கூறுவதால், சண்முகனாரிடம் கவலையோ அச்சமோ சோர்வோ சிறிதும் காணப்படாத தன்மை யைப் பாரதியார் நன்கு அறிந்து கொண்டவர் என்பது தெரிகிறது.

'ஈரமிலா நெஞ்சுடையார் நின்னைக் காணின் அருள் வடிவமாகி நிற்பர்' எனவும் 'நேரறியா மக்களெலாம் நின்னைக் காணின் நீதி நெறியில் நிற்பர் எனவும் கூறுவதால் சண்முகனார் அருளுள்ளமும் கண்டிப்பும் கட்டுப்பாடும் உடையவர் என்பது புலனாகிறது. இவ்வியல்புகள் உடையார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். தம் மக்களை, பேரன் பேர்த்திகளை இவ்வாறே வளர்த்தார்.'

"யாரறிவார் நின்பெருமை? யாரதனை
மொழியினிடை அமைக்க வல்லார்?"

என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் பாரதி. இதோ, அவர் ஏக்கம் நீக்கப்படுகிறது; அவர் ஆவல் நிறைவேறுகிறது. ஆம், சண்முகனார் பெருமை உலகத்தால் அறியப்படுகிறது; அப் பெருமை 'மொழி யினிடை அமைக்க' வும் படுகிறது.

'மன்னர் புகழ் பாடினோம்; செல்வர் பெருமை செப்பினோம்; அதனால் எய்ப்புற்றோம்; மனங் கசந்தோம்; அதனால் மனிதரை இனிப்பாடோம் வானவரையே வாயாரப் பாடுவோம்' என்று உறுதி பூண்டிருந்த பாரதியார், மனிதராகிய சண்முகனாரை ஏன் பாடினார்? 'உன்னிடத்தே இமையோர்க்குள்ள வன்னமெலாங் கண்டோம்; நின்னைப் பாடிப் புகழ்ந்தோம்; மனம் மகிழ்ந்தோம்' என்று அவரே காரணமும் கூறி விடுகிறார்.

சண்முகனார் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காரணத் தால், பாரதியார் விழிகளுக்கு, வானுறையுந் தெய்வமாகத் தோன்றியிருக் கிறார். உயரிய பண்பாடுகளின் உறைவிடமாகி, உதவும் உள்ளங் கொண்ட ஒப்புரவாளராகி, மீமிசை மாந்தராக விளங்கினார் அவர்.

பாரதியார், சண்முகனார்க்கெழுதிய மடல்களின் கட்டு களை, சண்முகனாரின் இல்லத்தில் நான் பார்த்திருக்கிறேன். இப்பொழுது அம்மடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. அவை கிடைப்பின்,