பக்கம் எண் :

60கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

அன்று மாலை பாரதி கானாடுகாத்தான் போய்ச் சேர்ந்தார். அங்கே வை.சு. சண்முகம் இல்லத்தில் ஒன்பது நாள் இருந்தார். கவிஞரின் தேவைகள் யாவும் அங்கு கவனிக்கப் பெற்றிருந்தன.

அந்த ஊரிலேயே பாரதி இனித் தங்கி வசதியாய் வாழலாமென, 'செல்லம்மாவை அழைத்துவர ஒரு ஆளைக் கடயத்துக்கு அனுப்பி னார். ஆனால் செல்லம்மா வரவில்லை. அதனால் மனைவியின்றி இங்கே வாழ இயலாதென்று பாரதி, 6-11-1919 அன்று கிளம்பிச் சென்று விட்டார்..... கானாடு காத்தானில் வள்ளல் சண்முகத்தின் மீது பாரதி ஒரு பாடல் பாடியுள்ளார். எட்டயபுரம் ஜமின்தாரிடம் நொந்து, "மன்னர்மிசைச் செல்வர் மிசைத் தமிழ்பாடி யெப்ப்புற்று மனங்கசந்து பொன்னனைய கவிதையினி வானவர்க்கேயன்றி மக்கட் புறத்தார்க்கீயோம்' என்று கொண்டிருந்த முடிபை வை.சு. சண்முகத்தின் வள்ளன்மை கண்டு மாற்றிக் கொண்ட தாக இப்பாடலில் பாரதி குறிப்பிடுகிறார்."

இவ்வாறு பாரதியாருக்கும் ஏனைப் பாவலர்க்கும் ஒப்புரவு செய்து, இறுதி வரை அரியேறென வாழ்ந்து வந்த சண்முகனார் 1962 ஆம் ஆண்டு ஜுன் 19 ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்துப் பொன்றாப் புகழுடம்பு எய்தினார்.

இப்பிரிவுக்கிரங்கிய திரு.ரா. அ. பத்மநாபன் 16-12-62 வெளி வந்த தினமணி - சுடரில், 'பாரதியை ஆதரித்த வள்ளல்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைக் காணும் பொழுது, சண்முகனார் பாரதியிடம் கொண்ட ஈடுபாட்டையும் அவருக்குப் பின்னரும் அக்குடும்பத்தை ஆதரிக்க எண்ணிய அருளுள்ளத்தையும் உணர முடிகிறது. அக்கட்டுரையின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.

"கானாடுகாத்தான் தமிழ் வள்ளல் வை.சு. சண்முகம் இவ்வாண்டு ஜுன் 19 ஆம் தேதி காலமானார் என்ற செய்தி பாரதி அன்பர் களுக்குத் தனி வருத்தத்தை உண்டாக்கி யிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

வை.சு.சண்முகத்தின் அழைப்பின் பேரில் பாரதியார் இருமுறை செட்டிநாட்டிற்கு விஜயம் செய்திருக்கிறார்.

28-10-1919 அன்று கானாடுகாத்தான் போகும் வழியில் காரைக்குடியில் நண்பர்களால் வரவேற்கப் பெற்றார் பாரதி, மதுரை பஸ்ஸில் காலை 10.30 மணிக்கு வந்து இறங்கினார் கவிஞர்.