146 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
லிருந்து இச்செய்தி தெரிகிறது. சேர நாட்டுக்கு வந்து கொண்டிருந்த யவன வாணிகக் கப்பல்களை இங்கிருந்த கடற் கொள்ளைக்காரர் துன்புறுத்திக் கொள்ளையடித்தனர் என்று அவர் எழுதியுள்ளார். இவ்வாறு குறும்பு செய்துகொண்டு சேர நாட்டுக் கப்பல் வாணிகத்தைத் தடைசெய்து கொண்டிருந்த இக்குறும்பர்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன்னுடைய கடற் சேனையைச் செலுத்தி வென்று அவர்களின் காவல் மரமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டினான். இச்செய்தியை இவனைப் பாடிய குமட்டுர்க் கண்ணனார் 2ஆம் பத்தில் கூறுகிறார்: பவர் மொசிந்து ஒல்கிய திரள்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்றெறி முழங்குபனை செய்த வெல்போர் நாரரி நறவின் ஆர மார்பின் போரடு தானைச் சேரலாத! (2ஆம் பத்து 1 : 12-16) துளங்கு பிசிருடைய மாக்கடல் நீக்கிக் கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை ஆடுநர் பெயர்த்துவந் தரும்பலி தூஉய்க் கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோள் இயவ (2ஆம் பத்து 7 : 4-7) இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச் சென்று கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேர லாதன் (2ஆம் பத்து 10 : 2-5) நெடுஞ்சேரலாதன் கடம்பறுத்த செய்தியை மாமூலனார் என்னும் புலவரும் கூறுகிறார். வலம்படு முரசின் சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து (அகம் 127 : 3-4) சால்பெருந் தானைச் சேரலாதன் மால்கடல் ஓட்டிக் கடம்பறுத் தியற்றிய பண்ணமை முரசின் கண்ணதிர்ந் தன்ன (அகம் 347 : 3-5) |