பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்285

குலவு வேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கென

என்பது சிலம்பு. (கட்டுரை காதை 55-64).

மேலும், சேரன் செங்குட்டுவன் பெருஞ்சோறு கொடுத்த செய்தியையும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

“பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும்”

என்றும் (சிலம்பு.25-ஆம் காதை 143-ஆம் அடி)

“வரும்படைத் தானை அமரர் வேட்டுக் கலித்த
பெரும்படை தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து”

என்றும், (சிலம்பு கால்கோட்காதை 48-49 அடி) வருவன காண்க மேலும்,

மறப்படைக் குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு

என்பது அகநானூறு 233 ஆம் செய்யுள், மாமூலனார் பாடியது. எனவே, பெருஞ்சோற்றுநிலை ஓர் அரசனுக்குச் சிறப்பாகக் கூறப்படுவது அன்று என்று கூறுவது தவறாகிறது.

2. “மேலும், ஒரு வேந்தன் போருக்குச் செல்லும் தன் படைஞர்க்கு அளிக்கும் விருந்து, வணிக முறையில் கைம்மாறு கருதிச் செய்யுங் கடமையே யன்றி, வள்ளன்மை முறையில் வழங்கும் கொடையாகாது. போர்க்களத்தில் தன் வேந்தன் பொருட்டு உயிரைத் துறக்கத் துணியும் மறவனுக்கும், ஓர் உருண்டை சோறு கொடுத்தல் தானா பெரிது!” என்று எழுதுகிறார் தேவநேயர்.

தன் அரசனுடைய வெற்றிக்காகத் தன் உயிரையுங் கொடுத்துச் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கத் துணிந்த போர் வீரனுடைய தியாகத்தின் பெருமையை உணர்ந்த அரசன் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் தான், வீரனுடைய (சாதாரண வாழ்க்கை)