பக்கம் எண் :

288மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

செய்தியைக் கூறுகிறார். புறநானூற்று இரண்டாம் செய்யுளில் கூறப் படுகிற உதியன் சேரலும், மாமூலனார் கூறுகிற உதியன் சேரலும் ஒரே பெயருடையவர் என்பதைக் கவனியுங்கள். இருவரும் பெருஞ்சோறு கொடுத்தனர் என்பதையும் கவனியுங்கள். மாமூலனார் கூறுகிற செய்தி இது.

மறப்படைக் குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல
கூளிச் சுற்றம் குழீஇஇருந் தாங்கு

என்பது. மாமூலனார் தமது வேறு செய்யுள்களில் சரித்திரச் செய்திகள் பலவற்றைத் தெளிவாகக் கூறுகிறார். ஆனால் இச் செய்யுளில் பாரதப் போரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஐவர், ஈரைம்பதின்மர் என்றுகூடச் சொல்லவில்லை. பெருஞ்சோறு கொடுத்த உதியஞ்சேரல், புகழ்பெற்ற பாரதப் போரில் சோறு கொடுத்தான் என்றால் அந்தச் சிறப்பான செய்தியை வெளிப்படையாகக் கூறி யிருப்பார் அல்லவா? அப்படிக் கூறாமையினாலே இவன் கொடுத்த பெருஞ்சோறு வேறு படையினருக்கு என்பது தெரிகிறதல்லவா?

சோழ நாட்டிலிருந்த பராசரன் என்னும் பார்ப்பான் சேர நாடு சென்று, சேரனிடம் பரிசு பெற்றுப் பாண்டி நாட்டுத்...... என்னும் ஊருக்கு வந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இச் செய்தியைக் கூறுகிற சிலப்பதிகாரம் பெருஞ்சோறு கொடுத்த கோன் ஒருவனைக் கூறுகிறது.

பெருஞ்சோறு பயந்த திருந்துவேற் றடக்கை
திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை
... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... ..
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேல் சேரலற் காண்கெனக்
காடு நாடு மூரும் போகி
நீடுநிலை மலையம் பிற்படச் சென்றாங்கு

(சிலம்பு. கட்டுரை 55-66)

இதில் ஒரு சேர அரசன் பெருஞ்சோறு கொடுத்தது கூறப் படுகிறது. இதற்கு உரை எழுதிய அரும்பதவுரை யாசிரியர், பெருஞ்