பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்443

(திணை - பொதுவியல்; துறை - பொருள்மொழிக் காஞ்சி. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது.)

விழுமிய பொருள் பொதிந்த இந்தச் செய்யுள் புற நானூற்றில் தொகுக்கப்படும் சிறப்புப்பெற்றுள்ளது. இச்செய்யுளை இயற்றிய இந்தப் பாண்டியன் யாரிடங் கல்வி பயின்றான் என்பது தெரியவில்லை.

கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் சென்றபோது பாண்டி நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தவன் இந்த நெடுஞ்செழியனே. மதுரையில் வாணிகஞ் செய்து பொருளீட்ட எண்ணிய கோவலன், வாணிக முதலீட்டுக்காகக் கண்ணகியின் பொற்சிலம்பை விற்கச் சென்று வஞ்சகன் ஒருவனால் ‘கள்வன்’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட போது, அக்குற்றத்தைத் தீர விசாரிக்காமல் அவனைக் கொல்வித்த வனும் இந்த நெடுஞ்செழியனே. கோவலன் மேல் சுமத்தப்பட்ட பொய்ப்பழியை நீக்குவதற்காகக் கண்ணகி வழக்குத் தொடுத்து வாதாடியபோது, தான் கோவலனுக்குக் கொலைத் தண்டனை விதித்தது அரசநீதி என்று எடுத்துக்காட்டியவனும் இந்த நெடுஞ்செழியனே. பிறகு கண்ணகி, குற்றஞ்செய்யாதவன்மேல் பொய்க்குற்றஞ் சாட்டிக் கொலை செய்வது அநீதி என்று சான்று காட்டி நிறுவிய போது, தான் செய்தது தவறுதான் என்று கண்டு, தன் தவற்றை யுணர்ந்து அஞ்சி நடுங்கி அரசுகட்டிலில் (சிம்மாசனத்தில்) இருந்தபடியே உயிர் விட்டவனும் இந்த நெடுஞ்செழியனே. இவனுடைய ஆட்சிக்காலத்தில் வடநாட்டிலிருந்து மதுரையின்மேல் படையெடுத்து வந்து போர் செய்த ஆரியப்படையை வென்று ஓட்டித் துரத்தியவனும் இந்த நெடுஞ் செழியனே. இவற்றையெல்லாம் சிலப்பதிகாரம், மதுரைக்காண்டத்தின் இறுதிச் செய்யுளினால் அறிகிறோம்.

வட வாரியர் படை கடந்து
தென்றமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பிற் றேவி தன்னுடன்
அரைசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்

என்பது அதன் வாசகம்.

கல்வி கற்றுப் புலவனாக விளங்கிய இந்தப் பாண்டியன் போர்க்களத்தில் பகைவரை வென்று புகழ் பெற்று விளங்கினான். அந்த