| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 127 |
“அறந்திறல் மரபில் பெருஞ்சதுக் கமர்ந்த வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல் இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை” (9ஆம் பத்துப் பதிகம்) இதனால் கொங்கு நாட்டை யரசாண்ட இளஞ்சேரலிரும் பொறை, சேர நாட்டையரசாண்ட செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்திலேயே (பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்பே) இறந்து போனான் என்று திட்டமாகத் தெரிகிறது. கி.பி. 175க்கு முன்னமே இறந்துபோனான் என்று தெரிவதால் (உத்தேசம்) கி.பி. 170இல் இவன் இறந்து போனான் என்று கருதலாம். இவன் பதினாறு யாண்டு அரசாண்டான் என்று தெரிகிற படியால் (170 - 16 = 154) கி.பி. 154இல் இவன் சிம்மாசனம் ஏறினான் என்பது தெரிகிறது. எனவே, இளஞ்சேரல் இரும்பொறை உத்தேசமாக கி.பி. 154 முதல் 170 வரையில் அரசாண்டான் என்று கொள்ளலாம். சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்திலேயே இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான் என்பதையறியாமல், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும் கே.ஜி. சேஷையரும் அவன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு இருந்தான் என்று எழுதியுள்ளனர். இளஞ்சேரல் இரும்பொறை ஏறத்தாழ கி.பி. 190இல் இருந்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது முழுவதும் தவறு. செங்குட்டுவனுக்கு முன்னே இறந்து போனவன் அவனுக்குப் பின்னே எப்படி வாழ்ந்திருக்க முடியும்? இளஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பு கொங்கு நாட்டை யரசாண்டவன் அவனுடைய பெரிய தந்தையாகிய தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை என்று அறிந்தோம். அவன் பதினேழு ஆண்டு அரசாண்டான் என்று 8ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. எனவே, அவன் உத்தேசமாகக் கி.பி. 137 முதல் 154 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம். இவனுடைய ஆட்சிக்காலமும் சேரன் செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்திலேயே அடங்கிவிட்டது. பெருஞ்சேரல் இரும்பொறையின் தந்தையாகிய செல்வக் கடுங்கோவாழியாதன் இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான் என்று 7ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. ஆகவே, இவன் உத்தேசமாக கி.பி. 112 முதல் 137 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். |