பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு137

கைகளில் பொன் தொடிகளை அணிந்திருந்தாள்.3 கோவலனுடைய மனைவி கண்ணகியார் பொன்தொடி முதலான நகைகளை எல்லாம் விற்ற பிறகும் சங்கு வளையை மட்டும் கடைசி வரையில் அணிந்திருந் தார். அவர் கோவலனை இழந்து கைம்பெண் ஆனபோது கொற்றவை கோயிலின் முன்பு தன்னுடைய சங்கு வளையை உடைத்துப் போட்டார்.4 கைம்பெண்களைத் தவிர ஏனைய மகளிர் எல்லோரும் முக்கியமாக மணமானவர்கள் எல்லோரும் சங்கு வளைகளை அணிந்திருந்தார்கள். இதைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். தமிழ்நாட்டு மகளிர் மட்டுமல்லர். ஏனைய பாரத நாட்டு மகளிர் எல்லோரும் அந்தக் காலத்தில் சங்கு வளைகளை அணிந்தனர். இந்த வழக்கம் மிகப் பிற்காலத்தில் மறைந்துபோய், கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. பாரத நாட்டில் முஸ்லிம்கள் தொடர்பு ஏற்பட்ட பிறகு இந்த மாறுதல் உண்டாயிற்று. இப்போதுங்கூட வடநாடுகளில் சில இடங்களில் மகளிர் சங்கு வளைகளை அணிந்து வருகின்றனர். கொங்குநாட்டு மகளிரும் அந்தக் காலத்தில் சங்கு வளைகளை அணிந்தனர். சங்கு வளைகள் கடற்கரை நாடுகளிலிருந்து கொங்கு நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. பெண்களுக்கு ஆடை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாகச் சங்கு வளைகளும் இருந்தன. ஆகையால், சங்கு வளை வாணிகம் அக்காலத்தில் பெரிதாக இருந்தது.

கொங்கு நாட்டில் பெரும்பாலும் மலைகள் உள்ள குறிஞ்சி நிலங்களும், காடுகள் உள்ள முல்லை நிலங்களும் இருந்தன. நீர்வளம், நிலவளம் பொருந்தின மருதநிலங்களும் இருந்தன. குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்த மக்கள் மலைகளிலும் மலைச் சாரல்களிலும் தினை அரிசியையும் ஐவனநெல் என்னும் மலை நெல்லையும் பயிரிட்டார்கள். மலைகளில் வளர்ந்த மூங்கிலிலிருந்து மூங்கில் அரிசியும் சிறிதளவு கிடைத்தது. மூங்கிலரிசியைச் சமைத்து உண்டனர். அதை அவலாக இடித்தும் உண்டனர். மலைகளில் மலைத்தேன் கிடைத்தது. மலைச் சாரல்களில் பலா மரங்கள் இருந்தன. அகில், சந்தனம், வேங்கை முதலிய மரங்களும் இருந்தன.

முல்லை (காட்டு) நிலத்தில் வாழ்ந்தவர்கள் வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவர்கள் பசுக்களையும் ஆடுகளை யும் வளர்த்தார்கள். அவைகளிலிருந்து பால், தயிர், வெண்ணெய், நெய் கிடைத்தன. அவரை, துவரை முதலிய தானியங்களும் விளைந்தன.