பக்கம் எண் :

172மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

கொண்டேன்’ என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை ... ... பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியதுபோது தகடூர் யாத்திரை கிடைக்கவேயில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தைவிட்டு யாத்திரை செய்துவிட்டதைப் போல இந்த அருமையான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்.”

கொங்கு நாட்டு அரசர்கள் இருவர் நடத்திய போரைக் கூறுவது தகடூர் யாத்திரை என்னும் நூல். இதில் அக்காலத்தி லிருந்த புலவர்கள் இந்தப் போரைப் பற்றிப் பாடிய செய்யுட்கள் தொகுக்கப்பட்டிருந்தன. எனவே, இந்த நூல் கொங்கு நாட்டில் உண்டான நூல்களில் ஒன்றாகும்.

இந்நூலைத் தொகுத்தவர் யார், தொகுப்பித்தவர் யார் என்பதும் தெரியவில்லை. நூலே மறைந்துவிட்டபோது இச்செய்திகளை எவ்வாறு அறியமுடியும்? மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் புத்தகத்தில், தகடூர் யாத்திரை என்னுந் தலைப்பில் இந்நூலைப் பற்றிய ஏனைய விஷயங்களை அறியலாம்.

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு, எட்டுத்தொகை நூல்களில் மூன்றாவது தொகை நூல். அகவற் பாக்களினால் அமைந்த இந்நூல் மிகக் குறைந்த அடிகளைக் கொண்டது. மூன்று அடிச் சிற்றெல்லையையும் ஆறடிப் பேரெல்லையையுங் கொண்டது. ஐந்து அகப் பொருள் துறைகளைப் பற்றிக் கூறுகிறது. இக்காரணங்களினாலே இந்நூல் ஐங்குறுநூறு என்று பெயர் பெற்றுள்ளது. ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதல் ஆந்தையார், பேயனார் என்னும் ஐந்து புலவர்கள் இந்நூற் செய்யுள்களைப் பாடியவர்கள்.

“மருதம் ஓரம்போகி, நெய்தல் அம்மூவன்,
கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய
பாலை ஓதலாந்தை, பனிமுல்லை பேயனே,
நூலையோ தைங்குறு நூறு.”

என்னும் பழைய செய்யுளால் இதனையறியலாம்.

இந்த நூலைத் தொகுப்பித்தவர், கொங்கு நாட்டையரசாண்ட யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. தொகுத்தவர் இவ்வரசனால் ஆதரிக்கப்பெற்றவராகிய புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். புலவர்