பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 181 |
இனி அடுத்த ஆறு எழுத்துக்களைப் (6 முதல் 11 வரை) பார்ப்போம். 6ஆவது எழுத்து பு என்பது. 7ஆவது எழுத்து ண என்பது. 8ஆவது எழுத்து ரு என்பது. சாசன இலாகா இதை ர என்றும் ர் என்றும் வாசிக்கிறது. டி.வி. மகாலிங்கம் த என்றும், ஐ மகாதேவன் வ (வி) என்றும் வாசிக்கிறார்கள். இது பிராமி ரு என்பதில் ஐயமில்லை. ர் என்று இருக்க வேண்டிய இது ரு என்று எழுதப்பட்டிருக்கிறது. 9ஆம் பத்தாம் எழுத்துக்கள் த்தா என்பன. 11ஆவது எழுத்து ன் என்பது. இந்த எழுத்துக்களை ஒன்றாகச் சேர்த்தால் புணருத்தான் என்றாகிறது. ஐ. மகாதேவன் இவற்றைப் பண்வித்தான் என்றும் டி.வி. மகாலிங்கம் பூணதத்தான் என்றும் வாசிப்பது சரியாகத் தோன்றவில்லை. சாசன இலாகா படித்துள்ள புணர்த்தான் அல்லது புணருத்தான் என்பதே சரியென்று தெரிகிறது. ஆகவே, முதல் பதினொரு எழுத்துக்களைச் சேர்த்து வாசித்தால் எழுத்தும் புணர்த்தான் என்றாகிறது. இனி முதல் வரியில் உள்ள கடைசி மூன்று எழுத்துக்களைப் பார்ப்போம். பன்னிரண்டாவது எழுத்து ம என்பது. இதற்கு அடுத்த (13ஆவது) எழுத்து சரியாக எழுதப்படாததால் பலவித ஊகங்களுக்கு இடமளிக்கிறது. எழுத்தைப் பொறித்த கற்றச்சனுடைய கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறு இது. இதை ணி என்று கொள்வதே பல விதத்திலும் பொருத்தமாகத் தோன்றுகிறது. இந்தச் சாசனத்தில் வேறு மூன்று ணகர எழுத்துக்கள் தெளிவாகப் பொறிக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த ணி எழுத்தைக் கற்றச்சன் செம்மையாகப் பொறிக்காமல் விட்டுவிட்டான். கடைசி (14ஆவது) எழுத்து ய அல்லது ய் என்பது. இதில் சந்தேகத்துக்கு இடமேயில்லை. இந்த மூன்று எழுத்துக் களையும் சேர்த்து மணிய் என்று வாசிக்கலாம். இந்தப் பிராமி எழுத்தின் முழு வாசகமும் இவ்வாறு அமைகிறது: எழுத்தும் புணரு(ர்)த்தான் மணிய வண்ணக்கன் தேவன் சாத்தன் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன் (முனிவருக்கு இக்குகையைத் தானஞ் செய்தது மட்டும் அல்லாமல், இந்த எழுத்துக் களையும்) புணர்த்தினான் (எழுதினான், பொறித்தான்) என்பது இதன் கருத்து. |