பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு201

கோவலனுடன் மதுரைக்குச் சென்ற கண்ணகியார், கிழக்கு வாயிலில் நுழைந்து கோவலனை இழந்த பிறகு மேற்கு வாயிலின் வழியே வெளிப்போந்தார்.

‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென’

(சிலம்பு. கட்டுரை. 182 - 183)

மதுரைமா நகரத்தின் கோட்டை வாயிலின் மேலே பந்தும் பாவையும் தொங்கவிடப்பட்டிருந்தன என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது.

‘செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர் தேய்த்த போரரு வாயில்.’                    (திருமுருகு 67 - 69)

“போரை வென்று விரும்பிக் கட்டின சேய் நிலத்தே சென்றுயர்ந்த நெடிய கொடிக்கருகே, நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையின் தூங்கியே விடும்படி, பொருவாரை இல்லையாக் குகையினாலே எக்காலமும் போர்த்தொழிலரிதாகிய வாயில். பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்கு தூக்கின பந்தும் பாவையும்” என்பது நச்சினார்க்கினியர் உரை.

(சேர மன்னனுடைய வஞ்சிமா நகரத்துக் கோட்டை வாயிலிலும், மதுரைக் கோட்டையிலிருந்தது போல எந்திரப் பொறிகள் அமைக்கப் பட்டிருந்ததுடன், சிலம்பும் தழையும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன என்று பதிற்றுப்பத்து 6ஆம் பத்து 3ஆம் செய்யுள் கூறுகிறது.

‘தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற்
செம்பொறிச் சிலம்பொடு அணிதழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
கோள்வல் முதலைய குண்டுகண் அகழி
வானுற ஓங்கிய வளைந்துசெய் புரிசை’                    (5 - 9)

‘சிலம்பும் தழையும் புரிசைக்கண் தங்கின வென்றது ஈண்டுப் பொரு வீருளீரேல் நுங்காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடை யினையு மொழித்து. இச் சிலம்பினையும் தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவா றென்க. இனி, அவற்றை அம் மதிலில் வாழும் வெற்றி மடந்தைக்கு அணியென்பாருமுளர்.’ பழயவுரை.)