204 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
கோவில்கள் : ஐயை என்னும் கொற்றவைக்கு மதுரைமா நகரத்திலே கோவில் இருந்தது. (சிலம்பு : கட்டுரை. 107-109, ௸ 125; ௸ 181). மதுரைமா நகரத்தின் காவல் தெய்வமாகிய மதுராபதிக்கும் ஒரு கோயில் இருந்தது. (சிலம்பு : அழற்படு. 156, கட்டுரை 1-13) மதுராபதிக்கு மதுரைமா தெய்வம் என்னும் பெயர் உண்டு (சிலம்பு: கட்டுரை 177) சிவபெருமான், திருமால், பலதேவன், முருகன் முதலிய தெய்வங்களுக்கும் மதுரையில் கோவில்கள் இருந்தன. ஜைன பௌத்தப் பள்ளிகளும் இருந்தன. ‘நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்’ என்று சிலம்பு (ஊர்காண். 7-11) கூறுகின்றது. சிவபெருமான் கோவிலில் வெள்ளியம்பலம் இருந்தது. ‘அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க் கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்’ என்று சிலம்பு (பதிகம் 39-41) கூறுகிறது. இந்த வெள்ளியம்பலத்திலே பெருவழுதி என்னும் பாண்டியன் துஞ்சினான் என்றும், ஆனதுபற்றி அப்பாண்டியன் ‘வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி’ என்று பெயர் பெற்றான் என்றும் புறநானூறு (58ஆம் செய்யுள்) கூறுகிறது. ‘திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத் தாமு மவரு மோராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் |