பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 205 |
சிறந்துபுறங் காக்குங் கடவுட் பள்ளியும்’ என்று மதுரைக்காஞ்சி (461-467), மதுரையில் பௌத்த பள்ளி இருந்ததைக் கூறுகின்றது. சமணப் பள்ளி (ஜைனப் பள்ளி) இருந்ததையும் கூறுகின்றது: ‘வண்டுபடப் பழுதிய தேனார் தோற்றத்துப் பூவும் புகையும் சாவகர் பழிச்சச் சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்றிவட் டோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து வானமு நிலனுந் தாமுழு துணரும் சான்ற கொள்கைச் சாயா யாக்கை யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார் கல்பொளிந் தன்ன இட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக் கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து நோக்குவிசை தவிர்ப்பப் மேக்குயர்ந் தோங்கி யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்’ (மதுரைக்காஞ்சி 475 - 487) என்று மதுரைக்காஞ்சி கூறுகின்றது. சிந்தாதேவி கோவில் என்னும் கலைமகள் கோவிலும் மதுரையில் இருந்தது. இது பௌத்தப் பள்ளியைச் சார்ந்து இருந்தது. ‘இருங்கலை நியமத்து தேவி சிந்தாவிளக்கு’ என்றும், ‘சிந்தா தேவி செழுங்கலை நியமத்து நந்தா விளக்கு நாமிசைப் பாவை’ என்றும் மணிமேகலை (பாத்திர மரபு 10-11, 17-18) கூறுகின்றது. ஆபுத்திரன் என்பவன், ‘தக்கிண மதுரை தான்சென் றெய்தி சிந்தா விளக்கின் செழுங்கலை நியமம்’ சேர்ந்தான் என்று மணிமேகலை (13 ஆபுத்திரன் திறம் (105-108) கூறுகின்றது. |