தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 185 |
வரகுண மகாராசன், தொண்டை நாட்டில் போர் செய்து பெண்ணையாற்றங்கரையில் உள்ள அரசூரில் தங்கியிருந்த போது இந்தக் கட்டளையை ஏற்படுத்தினான். “ஸ்ரீபடாரர் அனுக்கிரகத்தினால் முள்ளி நாட்டு இளங்கோய்க்குடி திருப்போத் துடையார் ஸ்ரீகோயில் படாரர்க்கு முதல் கெடமை பொலி கொண்டு நான்கு காலமும் திருவமுது செலுத்துவதாக வரகுண மகாராசர் தொண்டை நாட்டுப் பெண்ணைக்கரை அரைசூர் வீற்றிருந்து இளங்கோய்க்குடிச் சபையார் கையில் கொடுத்த காசு 290”. என்று இந்தச் சாசன வாசகம் தொடங்குகிறது. (படராகர் - கடவுள்; பொலி - வட்டி) இந்த 290 பொற்காசின் வட்டியிலிருந்து நாள் தோறும், நான்கு பொழுது திருவமுது நிவேதிக்க வரகுண பாண்டியன் கட்டளை ஏற்படுத்தினான். அதன் விபரம் வருமாறு: திருவமுது : ஒரு வேளைக்குச் செந்நெல் தீட்டல் அரிசி நானாழி. கும்மாயம் : (கும்மாயம் என்பது பயற்றுப்பருப்புப் புழுக்கலுடன் சர்க்கரையும் நெய்யும் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி) இதற்குப் பயற்றுப்பருப்பு இரு நாழி.) பசுவின் நறுநெய் : உழக்கு தயிர் : “பசுவின் தோய் தயிர் உரி” வாழைப்பழம் : ‘கருவாழைப்பழம் நான்கு’. சர்க்கரை ஒரு பலம். கறியமுது : காய்கறி ஒன்று, புளிங்கறி இரண்டு, புழுக்குக்கறி ஒன்று ஆகக் கறி ஐந்தினுக்குக் கறி பத்துப் பலம். |