மறைந்துபோன தமிழ் நூல்கள் | 293 |
எனவும் போந்த இவற்றை விரித்துரைத்துக்கொள்க, இன்னும் மகரக் குறுக்கத்திற்குப் பயன் மகரப் பிரகரணத்தும் கண்டுகொள்க. ஈண்டு உரைப்பிற் பெருகும்.” யாப்பருங்கலம், அடியோத்து, விருத்தியுரையில் உரையாசிரியர் இவ்வாறு கூறுகிறார்: “அதத்திணை யகவலுள் வஞ்சி வாரா ... ... ... அஃதே யெனிற் பட்டினப் பாலைத் தொடக்கத்தன அகத்திணை வஞ்சியாம் பிறவெனின், அகத்திணையகத்து வஞ்சி வருவது சிறப்பின்றாயினும், சிறுபான்மை வரப்பெறு மென்பாரு முளராகலின் அவையும் அமையுமென்பது. என்னை? ‘அகத்திணை யகவயி னிற்ப வஞ்சி சிறப்பில வெனினுஞ் சிலவிடத் துளவே’ 13 என்பது மாபுராணச் சூத்திரமாகலின்.” யாப்பருங்கலம், ஒழிபியலில் விருத்தியுரைகாரர் மாபுராணத்தைக் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது வருமாறு: “நான்கடியும் எழுத்தொத்து வருவனவற்றைத் தலையாகு சந்தம் என்றும், ஓரெழுத்து மிக்குங் குறைந்தும் வருவனவற்றை இடையாகு சந்தம் என்றும், இரண்டெழுத்து மிக்குங் குறைந்தும் வருவனவற்றையும் பிறவாற்றான் மிக்குங் குறைந்து வருவனவற்றையும் கடையாகு சந்தம் என்றும் வழங்குவ ரொருசாராசிரியர். தாண்டகங்கட்கும் இவ்வாறே சொல்லுவார். இவற்றை யெல்லாம் ... ... ... மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் புகுதி யுடையார்வாய்க் கேட்டுக்கொள்க. இவை யெல்லாம் விகற்பித் தீண்டுரைப்பிற் பெருகும்.” “இனி மாபுராணமுடையார் கூறுமாறு : விகார மாத்திரையாகிய உயிரளபெடையும், கான் மாத்திரையாகிய வொற்றும் பாட்டுடைத் தலைமகன் பெயருக்கும் அவன் பெயர்க்கு அடையாகிய சொற்கண்ணும் புணர்ப்பிற் குற்ற மென்றார். என்னை? ‘கழிநெடி லசையுங் காலெழுத் தசையும் பெயரயற் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிப வாய்மொழிப் புலவர்’ 14 |