பக்கம் எண் :

240மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்?
புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்?
கணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும்
பிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ!
 165உதும்பர தருவில் ஒருகனி அதனுட்
பிறந்திறும் அசகம் இவரிலும் கோடி.
பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர்.
அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ!
சுலபமாய் நுமக்கெதிர் அணுகலால். துதித்துப்
 170பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம்.
ஒழுக்கமற் றன்றது வெனினும், உம்மேல்
அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மோடு
இத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ்
எத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட்
 175டொத்ததோர் பங்கே உறுமெனக் கெனவே
ஓடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்!
நீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள்
யாரே ஆயினும் சீராம் தங்கள்
உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச்
 180சஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின்.
வஞ்சகம் இல்லை. என் வார்த்தையீ துண்மை.
மானமோ டவரையிம் மாநக ரதனுட்
சேமமாய் இன்றிருத் திடுவம். திண்ணம்,
உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே
 185எத்தனை யோபேர். இவர்க்கவர் துணையாம்.
படைகள்: இல்லை! இல்லையிங் கத்தகைப் புல்லியர்!


உதும்பர தரு - அத்திமரம். பிறந்துஇறும் - பிறந்து சாகும். அசகம் - கொசுகு. அத்திக்காய்களில் கொசுக்கள் உண்டாகி அதிலேயே மடிவது இயற்கை.

அடி 167. இவ்வடியுடன், ‘தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று’ என்னும் திருக்குறளை ஒப்புநோக்குக.

அழுக்காறு - பொறாமை. சேமம் - பாதுகாவல். புல்லியர் - இழிந்தவர்.