| | | யாக்கையில் அமையுமோ நீக்கமில் இன்பம். எனக்கெனக் கென்றெழும் இச்சையா திகளெனும் |
| | 115 | மனக்களங் கங்களாம் மாசுகள் அனைத்தும் தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி மண்ணிய மணியாப் பண்ணிட என்றே வைத்தஇக் கடிய வாழ்க்கையாம் சாணையைப் பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க |
| | 120 | யத்தனஞ் செய்திடும் ஏழையர் போல என்னை நீ எண்ணினை! வாணி! இந்தச் சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம். தவமே சுபகரம். தவமென்? உணருவை? உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து |
| | 125 | செந்தீ ஐந்திடைச் செறிந்தமைந் துறைதல் ஆதியா ஓதுப அல்ல. அவற்றைத் தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர். இவ்வுயிர் வாழ்க்கையில் இயைந்திடும் துயரம், ஐயோ! போதா தென்றோ அன்னோர் |
| | 130 | போனகம் துறந்து கானகம் புகுந்து தீயிடை நின்று சாவடை கின்றார்? தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப பந்தபா ரத்தினைப் பேணித் தனது சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க் |
| | 135 | கெந்தநா ளுஞ்சுகம் இயைந்திடக் கடமையின் முந்துகின் றவரே முதற்றவ முனிவர். |
| வாணி: | | அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும் ஒத்ததே அன்றோ? |
இச்சையாதிகள் - ஆசை முதலியன. மனக்களங்கம் - மனத்தில் படிகிற கறை. மாசுகள் - அழுக்குகள். மண்ணிய - கழுவிய. சாணை - சாணைக்கல், மாணிக்கம் முதலிய கற்களைப் பட்டை பிடிப்பதற்கு உபயோகப்படுத்துவது. தொழும்பு - அடிமை. பந்தம் - கட்டு. செந்தீ ஐந்து - பஞ்சாக்கினி. நான்குபுறத்திலும் நெருப்புக் குழியும் மேலே சூரியனும் எரிக்கும்போது நடுவில் இருந்து தவம் செய்வதற்கு உதவுவது. போனகம் - உணவு.