6.3 காப்பிய அமைப்பும் கதையும்

பெருங்கதை ஐந்து காண்டங்களை உடையது. ஒவ்வொரு காண்டமும் காதை என்னும் பல உட்பிரிவுகளைக் கொண்டது. காதைகளில் பெருங்கதையின் கதை நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன.
 

6.3.1 காண்டங்கள்

பெருங்கதையின் ஐந்து காண்டங்கள் வருமாறு :

ஐந்து காண்டங்களே அன்றித் துறவுக் காண்டம் என்று ஒரு காண்டம் இருந்ததாகவும், அது இறுதிக் காண்டம் ஆகும் என்றும், அது அழிந்து விட்டது என்றும் பொ.வே. சோமசுந்தரனார் கருதுகிறார். பெருங்கதை நூல் முழுவதும் கிடைத்தபாடில்லை. காண்டங்களின் உட்பிரிவுகள் ஆகிய காதைகள் பல அழிந்துள்ளன. உஞ்சைக் காண்டம் 58 காதைகளை உடையது. இவற்றுள் முதல் 31 காதைகள் அழிந்துள்ளன. இதே போல் ஐந்தாம் காண்டமாகிய நரவாண காண்டத்தில் 9 ஆம் காதைக்குப் பின் உள்ள காதைகள் அழிந்துவிட்டன. ஆறாம் காண்டமாகிய துறவுக் காண்டம் முழுவதும் அழிந்துள்ளது. காண்டங்களின் கிடைத்துள்ள காதை எண்ணிக்கை வருமாறு:

 உஞ்சைக் காண்டம்    - 27 காதைகள் (27+31=58)
 இலாவாண காண்டம்  - 20 காதைகள்
 மகத காண்டம்       - 27 காதைகள்
 வத்தவ காண்டம்     - 17 காதைகள்
 நரவாண காண்டம்    - 9 காதைகள்
 

6.3.2 உதயணன் கதை

ஒவ்வொரு காதையிலும், உதயணன் பிறப்பு, திருமணம், துறவு ஆகியவை பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
 

உதயணன் பிறப்பு

கௌசாம்பி நகர வேந்தன் சதானிகன். இவன் மனைவி மிருகபதி. இவள் நிறைமாதக் கருப்பம் உடையவளாய் இருந்தாள். ஒரு நாள் செவ்வாடை உடுத்தி மாடியில் உறங்கிக் கொண்டிருந்தாள். சிவந்த ஆடையினால் அவளை ஓர் ஊன்தடி (மாமிசத்துண்டு) என்று கருதிய சிம்புள் பறவை அவளைக் கட்டிலோடு நெடுந்தொலைவு தூக்கிச் சென்றது. அவள் ஊன் இல்லை என்பதை அறிந்த பறவை விபுலம் என்னும் மலையில் விட்டுச் சென்றது. அப்பொழுதில் அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு உதயணன் என்று பெயரும் இடப்பட்டது.
 

வளர்ப்பும் நண்பனும்

மலையில் மிருகபதியின் தந்தை தவம் செய்து வந்தார். அவர் தன் மகளையும் பேரனையும் கண்டு மகிழ்ந்தார். பின்னர் அவரே அவர்களை வளர்த்து வந்தார். அதே மலையில் இருந்த பிரமசுந்தர முனிவரின் மகன் யூகி, உதயணனின் நண்பன் ஆனான். இருவரும் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று வளர்ந்து வந்தனர்.
 

யானையுடன் நட்பு

உதயணன் யாழிசையில் வல்லவன். அவனது யாழின் இசைக்கு மயங்கி ஒரு தெய்வீக யானை அவனிடம் வந்தது. தொடர்ந்து அவனிடமே தங்கியிருப்பதற்கு யானை மூன்று நிபந்தனைகளை விதித்தது; உதயணனின் ஒப்புதலையும் வேண்டிப் பெற்றது. அதன்படி, யானை உண்ணும் முன்பு உதயணன் உண்ணக் கூடாது; யானை மீது உதயணன் தவிர வேறு யாரும் ஏறக் கூடாது; முகபடாம் முதலிய அணிகளை அணிவிக்கக் கூடாது. இவ்வாறே உதயணனும் அதற்கு உடன்பட்டு, ஒழுகி வந்தான்.
 







 

யானைத் தோழன்

பின்னர் உதயணன் தன் மாமனது அரசையும் தந்தையின் அரசையும் பகைவரிடம் இருந்து கைப்பற்றி ஆண்டு வந்தான்.
 

யானையை அடக்கல்

உதயணன் ஒரு நாள் சோர்வு மிகுதியால் யானைக்கு உணவு தரும் முன்பாக, தான் உண்டு விட்டான். இதனால் யானையும் அவனைப் பிரிந்து சென்று விட்டது. வருத்தம் அடைந்த உதயணன், யாழை இசைத்துக் கொண்டே காடு மலைகளில் எல்லாம் யானையைத் தேடி அலைந்தான். இந்நிலையில் உச்சயினியை ஆண்ட மன்னன், ஓர் இயந்திர யானையைப் பயன்படுத்தி உதயணனைச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த யூகி உதயணனை மீட்கத் திட்டம் இட்டான். இதன்படி உச்சயினியின் பட்டத்து யானையை மதம் கொள்ள வைத்துத் தெரு வீதிகளில் திரிய விட்டான். யானையை எவராலும் அடக்க இயலவில்லை. இறுதியில் மன்னன் உதயணனைச் சிறையில் இருந்து விடுவித்தான். யானையை அடக்க வேண்டினான். யானையை அடக்கிய உதயணன் அரசனின் நன்மதிப்பைப் பெற்றான்.
 

காதலும் திருமணமும்

பின்பு உச்சயினி மன்னன் மகள் வாசவதத்தைக்கு யாழ் கற்றுத்தரும் வேளையில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. உதயணன் வாசவதத்தையைச் சயந்தி நகரத்திற்கு அழைத்துச் சென்று, மணம் புரிந்து வாழ்ந்து வந்தான்.
 

காதல் மயக்கமும் யூகியின் சூழ்ச்சியும்

உதயணன் வாசவதத்தையுடன் கூடிக் காதல் வாழ்க்கை வாழ்ந்து வந்தான். காதல் மயக்கத்தில், அரசன் என்ற முறையில் ஆற்றவேண்டிய கடமையை மறந்தான். இதனால் இருவரையும் பிரித்தலே நாட்டுக்கு நன்மை என்பதை யூகி உணர்ந்தான். இருவரையும் பிரித்து வைக்கத் திட்டமும் தீட்டினான். அதற்கு முன்பாக, தான் (யூகி) இறந்துவிட்டதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பினான். அடுத்ததாக, வாசவதத்தையை யாரும் அறியாமல் வேறோர் இடத்திற்கு மாற்றி, அவள் தீயினால் மாண்டு விட்டதாகவும் செய்தி பரப்பினான். இருவரின் பிரிவையும் தாங்காத உதயணன் பெரிதும் மனம் கலங்கினான். அக்கவலையை மாற்ற இராசகிரியத்தில் இருந்த ஒரு முனிவரை அடைந்தான்.
 

உதயணனின் பல்வேறு திருமணங்கள்

இராசகிரியத்தில் இருந்தபோது அந்த நகரத்து அரசன் தங்கை பதுமாவதியை மணந்தான். பின்பு தன் நகராகிய கௌசாம்பிக்கு வந்தான். அங்கு, யூகியும் வாசவதத்தையும் மீண்டும் வருவதைக் கண்டு உதயணன் மகிழ்ந்தான். அதன் பின்னர், மானனீகை என்பவளையும், விரிசிகை என்பவளையும் மணந்து கொண்டு வாழ்ந்தான்.
 

உதயணன் துறவு

வாசவதத்தையின் மகன் நரவாண தத்தன் காந்தருவ உலகம் சென்றான். அவ்வுலகத்தை வெற்றி கொண்டு அங்கு ஆட்சி புரிந்தான். இதன் பின்னர் உதயணன், பதுமாவதியின் மகன் கோமுகனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். இறுதியில் துறவு மேற்கொண்டான்.

உறவு நீத்த துறவு          

இதையே பெருங்கதைக் காப்பியத்தின் கதைச்சுருக்கமாக அறிய முடிகிறது.

   

1.

பெருங்கதையைத் தம் உரைகளில் குறிப்பிடும் பழைய உரையாசிரியர் நால்வரின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை

2.

பெருங்கதையின் வேறு பெயர்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

விடை

3.

பெருங்கதையின் மூல நூல் எது?

விடை

4.

உதயணன் கதையைக் கூறும் வடமொழி நூல்கள் மூன்றின் பெயரைத் தருக.

விடை

5.

பெருங்கதை எத்தனை காண்டங்களை உடையது? காண்டங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை