6.3 விருந்தோம்பல்
 

E

தமிழர் தம் பண்பில் தலை சிறந்ததாகக் கருதப்படுவது விருந்தோம்பல். இந்த விருந்தோம்பல் பண்பைப் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கில் மிகச் சிறப்பாகப் படைத்துக் காட்டியுள்ளார்.
 

6.3.1 விருந்தோம்பும் தலைவி
 

உறவினர்களோ, நண்பர்களோ விருந்தினராக வீட்டுக்கு வருவது இயல்பு. அவ்வாறு வரும்போது ஒரு குடும்பத் தலைவி எவ்வாறு செயல்படுவாள் - செயல்படவேண்டும் என்பதைப் பாரதிதாசன் படைத்துக் காட்டியுள்ளார். குடும்பத் தலைவி, விருந்தினரை வரவேற்ற தன்மையைப் பாரதிதாசன்,
 

பொன்துலங்கு மேனி
     புதுமெருகு கொள்ள முகம்
அன்றலர்ந்த செந்தா
     மரையாக - நன்றே
வரவேற்றாள்

(குடும்ப விளக்கு II - ‘தலைவி விருந்தினரை வரவேற்றாள்’)
 

என்று குறிப்பிட்டுள்ளார்.
 

வந்த விருந்தினர்கள் கை, கால் கழுவுவதற்கு அண்டாவிலிருந்த தண்ணீரைக் காட்டினாள். அவர்கள் கை, கால் கழுவிய பிறகு அவர்களை உட்காரச் செய்தாள். அவர்கள் உண்டு மகிழ்வதற்குத் தேன்குழலும், பண்ணியமும் கொடுத்தாள். குடிப்பதற்குப் பால் கொடுத்தாள்; மென்று தின்பதற்கு வெற்றிலை, பாக்கு வைத்தாள்.  அவர்கள் தனியே இருக்கும்போது படிப்பதற்குப் பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் செய்தித்தாளும் கொடுத்துவிட்டு, சமையல் செய்வதற்காக உள்ளே சென்றாள். இவ்வாறு நல்ல குடும்பத்தில் காணப்படும் விருந்தோம்பல் பண்பைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
 

6.3.2 விருந்தோம்பல் சிறப்பு
 

விருந்தினர் வந்த செய்தியைத் தனது மாமன், மாமிக்குச் சென்று தெரிவித்தாள் தலைவி. அதைக் கேட்ட அவர்கள்,
 

நற்றமிழர் சேர்த்த புகழ்
     ஞாலத்தில் என்னஎனில்
உற்ற விருந்தை
     உயிரென்று - பெற்று உவத்தல்

(குடும்ப விளக்கு II - ‘மாமன் மாமி மகிழ்ச்சி’)
 

என்று மருமகளுக்கு எடுத்துக் கூறினார்கள். இதில் பண்டைக்காலம் முதல் தமிழர்கள் விருந்தோம்பலுக்குக் கொடுத்த சிறப்பிடத்தை அறிய முடிகிறது.
 

இட்டுப்பார்! உண்டவர்கள்
     இன்புற்றிருக் கையிலே
தொட்டுப்பார் உன் நெஞ்சைத்
     தோன்றுமின்பம் - கட்டிக்
கரும்பென்பார் பெண்ணைக்
     கவிஞர் எலாம் தந்த
விருந்தோம்பும் மேன்மையினால்
     அன்றோ? - தெரிந்ததா?

(குடும்ப விளக்கு II - ‘மாமன் மாமி மகிழ்ச்சி’)
 

என்று மேலும் விருந்தோம்பலின் சிறப்பை மாமனார் வாயிலாகப் பாரதிதாசன் எடுத்துக் கூறியுள்ளார். இப்பாடலில் பெண்களுக்கு உள்ள பெருமைகளில் முதன்மையானது விருந்தோம்பல் பண்பு என்று பாரதிதாசன் தெளிவுபடுத்தியுள்ளார்.
 

6.3.3 உணவு வகைகள்
 

விருந்தினர்க்கு வழங்குவதற்குத் தமிழர் பயன்படுத்திய உணவு வகைகளைப் பாரதிதாசன் பட்டியலிட்டுக் காட்டுகிறார். தயிர், பண்ணியம், வெண்ணெய் என்று கூறத் தொடங்கிய அவர் இலந்தை வடையைக் குறிப்பிடும்போது சேலத்து இலந்தை வடை என்று குறிப்பிட்டுள்ளார். அது போலவே பலாச்சுளை வற்றலைத் தெரிவிக்கும் இடத்தில் நாகர்கோவில் பலாச்சுளை வற்றல் என்று குறிப்பிட்டுள்ளார். சில குறிப்பிட்ட பொருள்கள், சில பகுதிகளில் மிகுதியாகவும் தரமாகவும் கிடைக்கும் என்பதை அவர் அறிந்திருந்ததால் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.
 

• ஊறுகாய் வகைகள்
 

இனிமை சொட்டும் எலுமிச்சை ஊறுகாய், வற்றிய வாய் நீர் சுரக்கும் நாரத்தை ஊறுகாய், உந்து சுவை மாங்காய் ஊறுகாய், காடி மிளகாய் ஊறுகாய் என்று ஊறுகாய் வகைகளைக் கண்ணாடிச் சாடியில் இட்டுப் பாதுகாப்பாக வைத்திருப்பதைத் தெரிவித்துள்ளார் பாரதிதாசன்.

மேலே கூறிய ஊறுகாய் வகைகளில் விருந்தினர் விரும்பும் ஊறுகாயை அவர்களுக்குப் பரிமாறி விருந்தோம்பும்படியாக மாமியார் தெரிவிப்பதுபோல் பாரதிதாசன் பாடியுள்ளார்.
 

6.3.4 விருந்து படைக்கும் முறை
 

விருந்தினருக்கு உணவு படைக்கும்போது எந்த உணவை எந்த வேளையில் படைக்க வேண்டும் என்பதையும் பாரதிதாசன், குடும்ப விளக்கில் பாடியுள்ளார். கீரை, தயிர் போன்ற உணவு வகைகள் இரவில் உண்ணத்தகாதவை. அவை சரியாகச் செரிமானம் ஆவதில்லை. இதை அறிந்திருந்த பாவேந்தர்,
 

கீரை, தயிர் இரண்டும்
     கேடு செய்யும் இரவில்
மோரைப் பெருக்கிடு
     முப்போதும் நேரிழையே

(குடும்ப விளக்கு II - ‘மாமி மருமகளுக்கு’)
 

என்று பாடிய அவர்,
 

சோற்றை அள்ளுங்கால்
     துவள்வாழைத் தண்டில் ஊறும்
சாற்றைப் போலே வடியத்
     தக்கவண்ணம் - ஊற்று நெய்யை

(குடும்ப விளக்கு II - ‘மாமி மருமகளுக்கு’)
 

என்று நெய் ஊற்றும் அளவையும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாழை இலையின் அடி உண்பவர்களின் வலப்பக்கத்தில் இருக்குமாறு இலையைப் போட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வாழை இலையில் கறி வகைகள் சோற்றைச் சூழ்ந்து இருக்குமாறு வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தண்ணீரையும், வெந்நீரையும் தனித்தனியே வைக்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர் முக்கனிகளைத் தேனிலும், நெய்யிலும் ஊறவைத்துப் பரிமாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

6.3.5 குறிப்பறிந்து உணவிடல்
 

உண்பவர்களுக்கு எந்த வகையான உணவுவகை மிகவும் பிடிக்கிறது என்பதை அறிந்து அவர்களுக்கு அந்த வகை உணவைப் பரிமாற வேண்டும். பரிமாறப்பட்ட உணவு போதுமானதுதானா, என்பதை அறிவதற்குக் கேட்டுப்பார்த்து அல்லது குறிப்பு அறிந்து பரிமாற வேண்டும் என்றும் மாமியார் கூறியுள்ளார். இதைப் பாவேந்தர்,
 

கேட்டும் குறிப்பு அறிந்தும்
ஊட்டுதல் வேண்டும் தாய்போல்

(குடும்ப விளக்கு II - ‘மாமி மருமகளுக்கு’)
 

என்று குறிப்பிட்டுள்ளார்.

உணவு பரிமாறும் இலையில் ஈ அமராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விருந்தினர்க்கு உணவு படைக்கும் தன்மையைக் கூறும் இடத்தில்,
 

ஈமுன்கால் சோற்றிலையில்
இட்டாலும் தீமையம்மா

(குடும்ப விளக்கு II - ‘மாமி மருமகளுக்கு’)
 

என்று சுகாதாரக் கண்ணோட்டத்தையும் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.
 

தன் மதிப்பீடு: வினாக்கள் - I

  1. ஆணின் கடமை எது?
  1. வண்டியின் மேல் மாமியார் அமர்ந்து வந்ததை விளக்குவதற்குப் பாரதிதாசன் பயன்படுத்தியுள்ள உவமை யாது?
  1. நற்றமிழர் சேர்த்த புகழ் யாது?
  1. ஊறுகாய் வகைகள் யாவை?