5.2 இறைச்சிப் பொருள் |
இறைச்சி என்னும் சொல் ‘இறு’ என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது. ‘தங்குதல்’ என்னும் பொருள் உடையது. கவிஞர்கள், தாம் கூறும் சொற்களுக்கு அடைமொழியாகக் கூறப்படும் பிற சொற்கள் தமது ஆற்றலால் பிறிதொரு பொருளைக் குறிப்பால் புலப்படுத்தி நிற்கும். அத்தகைய சொல் திறனை - புரிந்து - அறிந்து - உணர்ந்து கொள்ளும் நுட்பம் இறைச்சி எனப்படுகிறது. |
உள்ளுறையைப் போலவே இறைச்சிக்கும் கருப்பொருளே அடிப்படையாக அமைகிறது. இதனை |
கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே (240) |
என்று நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார். |
சொல்லின் பொருள், அதனால் பெறப்படும் குறிப்புப் பொருள், இரண்டுக்கும் மேலாக மேலும் ஒரு குறிப்புப் பொருள் புலப்படுமாயின் அதுவே இறைச்சி என்றும் அறிஞர் விளக்கம் கூறுவர். |
உதாரணம்: |
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப் |
(குறுந்தொகை, 83) |
விளக்கம்: |
இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான கருத்து: |
இனிமை தரும் சுளைகளை உள்ளே கொண்டிருந்தும், வெளியே இன்னாத முட்களையுடையனவாய்க் காணப்படும் பலாக் கனிகளை உடைய நாட்டின் தலைவன் வருவான் என்று செவிலி கூறினாள் என்பது. |
|
உள்ளத்தில், வரைந்து (மணந்து) கொண்டு இல்லறத்தொழுகி இன்பம் அடையும் எண்ணம் இருந்தும், புறத்தே இன்னல் தரும் களவிலே காதலுடையான்போல் காணப்பட்டான் தலைவன் என்பது, |
தோழிகூற்றின் புறத்தே பிறிதொரு பொருள் தோன்றினமையான் இப்பாடலில் இறைச்சி என்னும் பொருள் அமைப்பு உள்ளது. |
உள்ளுறை உவமம், இறைச்சி இரண்டும் சில ஒற்றுமைக் கூறுகளையும் வேறு சில நுட்பமான வேறுபாடுகளையும் உடையவை. |
ஒற்றுமை: |
1) இரண்டும் குறிப்பால் அறியப்படுவன. |
2) இரண்டும் கருப்பொருளின் அடிப்படையில் அமைவன. |
3) இரண்டும் அகப்பாடலுக்கே உரியன. |
வேற்றுமை: |
1) உள்ளுறையில் கருப்பொருள் தொடர்பான சொல்லும், பொருளும் அதனால் பெறப்படும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் பொருந்தி வரும். கருப்பொருள் உவமை போலவும், அதன் வழி நாம் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் உட்கருத்து உவமேயம் போலவும் அமையும். |
2) இறைச்சியில் கருப்பொருளும் உட்பொருளும் ஒத்து முடியாமல் எதிர் மறையாகவும் முடியலாம். சொற்பொருள் - அதற்கு இணையான குறிப்புப் பொருள் என்னும் இரண்டுக்கும் மேலாக வேறு ஒரு கருத்தும் வெளிப்படுவது இறைச்சியின் தனிப்பண்பாகும். |
புலவன் சொல்லுகின்ற உவமத்தோடு ஒத்துக் கூறக் கருதிய பொருள் வந்து முடியுமாறு அமைந்திருப்பது உள்ளுறை உவமம், புலவன் இயற்றிய செய்யுளின் பொருளுக்குப் புறத்தே தோன்றுவது இறைச்சி. |
1. | அகப்பாட்டினுள் வரும் பொருள்கள் எவை? |
விடை |
2. | உள்ளுறை உவமம் - விளக்கம் தருக. |
விடை |
3. | வெளிப்படை உவமத்தின் நான்கு வகைகளைச் சான்றுகளுடன் குறிப்பிடுக. |
விடை |
4. | இறைச்சிப் பொருளை ஒரு சான்றுடன் விவரிக்க. |
விடை |
5. | உள்ளுறைக்கும், இறைச்சிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எழுதுக. |
விடை |