5.7 தொகுப்புரை

    மொழியில் காலந்தோறும் ஒலிமாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பதைத் தெரிந்து கொண்டீர்கள். ஒரு மொழியில் நிகழும் ஒலி மாற்றங்களுக்கான காரணங்களை அறிந்து கொண்டீர்கள். தமிழ்மொழியில் ஒலி மாற்றங்கள் தாறுமாறாக நிகழவில்லை; ஓர் ஒழுங்கான முறையிலேயே நிகழ்ந்துள்ளன என்பதைத் தெரிந்துகொண்டீர்கள். ஒலி     மாற்றங்களை மொழியியலார் குறிப்பிட்ட விதிகளின் கீழ் அடக்கிக் காட்டுவதை அறிந்து கொண்டீர்கள். நிபந்தனை மாற்றம், நிபந்தனை இல்லா மாற்றம் ஆகியவற்றைப் பற்றி விளங்கிக் கொண்டீர்கள். கடன் பேற்றின் விளைவாகத் தமிழில் புதிய ஒலிகள், ஒலியன்கள் வந்தமையை அறிந்துகொண்டீர்கள். மேலும் ஓரினமாக்கம், வேற்றினமாக்கம், அண்ணமாக்கம், ஈடுசெய் நீட்டம், இடம் பெயரல் போன்ற பல்வேறு ஒலி மாற்றங்களைப் பற்றி மொழியியலார் கூறும் கருத்துகளை விளங்கிக் கொண்டீர்கள். ஒலி மாற்றங்கள் எழுத்துத் தமிழை விடப் பேச்சுத் தமிழிலேயே அதிகம் இருப்பதை இப்பாடத்தின் வாயிலாக உணர்ந்திருப்பீர்கள்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
ஒலி மாற்றங்களின் இரு வேறு வகைகள் யாவை?
2.
பழங்காலத் தமிழில் ஸகரமும், ஜகரமும் ஒலியன்களாக இருந்தனவா?
3.
பிளவு என்றால் என்ன?
4.
‘அவள் வந்தாள்’ என்பதைப் பேச்சுத்தமிழில் எவ்வாறு ஒலிக்கிறோம்?
5.
ஓரினமாக்கம் என்ற விதிப்படி பின்வரும் சொற்கள் எவ்வாறு மாறி அமையும்? செண்பகம் வன்சினம் வெட்கம் தன்பின் எண்பது
6.
ஈடுசெய் நீட்டம் என்றால் என்ன? ஒரு சான்று தருக.
7.
சதை, விசிறி, இடறி- இச்சொற்கள் மெய் இடம் பெயரல் என்ற விதிப்படி எவ்வாறு மாறும்?