5.5 தொகுப்புரை

    ஒட்டுமொத்தமான மக்கட் பிரிவினரில், தாழ்த்தப்பட்டோர் அல்லது தலித்து எனும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு, அம்மக்களின் தனிச் சிறப்பியல் கூறுகளாக (distinctive features) உள்ளவற்றை ஆய்வு செய்வது, தலித்தியல் திறனாய்வாகும். வருணாசிரமம் அல்லது சாதிய அமைப்புமுறை கொண்ட இந்தச் சமுதாயத்தில் ஆண்டாண்டுக் காலமாகத் தொடர்ந்து தீண்டாமை, கடின உழைப்பு, ஏழ்மை முதலியவற்றால் அவதிப்படும் தலித் மக்கள், அண்மைக் காலமாக எழுச்சி பெற்று வருகிறார்கள். இந்த எழுச்சி, இலக்கியத்தில் ஆழமாகவும் பரவலாகவும் காணப்பட்டு வருகிறது. தலித் இலக்கியம் என்று அடையாளம் காட்டுகிற நிலையில் இது வளர்ச்சி பெற்றுள்ளது.

    தலித்தியத் திறனாய்வு என்பது, இலக்கியங்களில் தலித்துகள் சித்திரிக்கப்படுவதை மட்டுமல்லாது, ஏனைய பிற மக்களோடு அவர்களுடைய உறவுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதையும், அவர்களை இந்தச் சமுதாயம் எவ்வாறு பல்வேறு நிலைகளில் அடிமைப்படுத்தி அல்லது தாழ்த்தி வைத்திருக்கிறது என்பதையும், தலித்து மக்களின் வெவ்வேறு எதிர்வினைகளையும் ஆராய்கிறது. ஏனைய அணுகுமுறைகளோடு ஒப்ப நோக்கினால், இது அண்மைக் காலத்தில் அறிமுகமான அணுகுமுறைதான். ஆனால் அதே நேரத்தில், இது, அழுத்தமும் வேகமும் கொண்டியங்குவது ஆகும். சமுதாயவியல் திறனாய்வின் ஓர் அங்கமாக இருந்தாலும், அதற்கு அணிசேர்க்கிற விதத்தில் இது தனித்து இயங்குகிறது.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
தலித்தியத் திறனாய்வின் அடிப்படை உணர்வாக அமைவது எது?
2.
தலித் கலைகளின் முக்கியமான பண்புகளைக் குறிப்பிடுக.
3.
நொண்டி நாடகம் என்பது எத்தகைய கலை வடிவம்?
4.
நந்தன் கதையை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனையாக- கதா காலட்சேப வடிவில் எழுதியவர் யார்?
5.
தலித் இலக்கியத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான கலையியல் பரிமாணம் எது?
6.
தலித்மக்களுக்கு ஒன்றோடு ஒன்றாயிணைந்த இரண்டு பக்கங்கள் எவை?
7.
தலித் இலக்கியமும் அதன் திறனாய்வும் சந்திக்கின்ற ஒரு முக்கியமான கேள்வி எது?