5.5 தொகுப்புரை புதுமைப்பித்தனுக்குப்
பின், சமூக அநீதிகளை எதிர்த்துத் தம் சிறுகதைகளின் மூலம் தீவிரக் குரல் கொடுத்தவர்
விந்தன். அவர் பொழுதுபோக்குக்காகக் கதை எழுதியவர் அல்லர். இதை அவரே சொல்லியுள்ளார்.
“பாவம், பொழுது தானாகவே போகக் கூடியது என்பது கூட இவர்களுக்குத் தெரியாது.
அதனாலேயே அதைப் போக்கக் கதைகள் வேண்டும் என்கிறார்கள்.” “குலுங்கும் கொங்கையும்,
குலுங்காத அல்குலும் அந்தக் காலத்துக் காவியங்களில் அரசர்களுக்காக இடம்பெற்றது
போல, கவைக் குதவாத காதலும், கருத்துக் கொள்ளாத கல்யாணமும் இந்தக் காலத்துக்
கதைகளிலே இவர்களுக்காக இடம்பெற வேண்டும் என்கிறார்கள்”. இவ்வாறு பொழுதுபோக்கக்
கதைகள் வேண்டுவோரைக் கடுமையாகச் சாடுகிறார் விந்தன். முடை நாற்றம் வீசக்
கூடிய சமூகத்தைப் படைத்துக் காட்டி, அதன் மூலம் வாசகர்களுக்கு விழிப்புணர்வு
ஊட்ட நினைக்கிறார் அவர். இலக்கியம் வாழ்க்கைக்காக என்ற தத்துவமே விந்தனின்
படைப்புக் கோட்பாடாகும்.
|