5:4 கற்பதற்கான பருவம்

E

கற்றவர்க்குத் தம் நாடு, தம் ஊர் என்ற வரையறை இல்லை.
அவர்கள் செல்லும் இடம் எல்லாம் தம்ஊராக, தம் நாடாக
ஆக்கிக்கொள்வர். அதாவது தம் கல்வி அறிவால் மக்களை
ஈர்த்துத் தம்முடன் சேர்ந்து இருப்பதை, தம் கல்வியின் பயனைப்
பகிர்ந்து கொள்வதைப் பெருமையாகக் கருதும் ஒரு சுற்றத்தை
ஏற்படுத்திக் கொள்வர். இந்த ஈர்ப்பும் பெருமையும் சுற்றமும்,
கற்ற கல்வியின் அளவினதாகப் பெருகும். அப்படி இருக்கையில்
சாகும் வரையில் தொடர்ந்து இடைப்படாமல் கல்லாது இருக்க
(Life Long Learning) எவ்வாறு முடியும் என்று வள்ளுவர்
வினவுகிறார்.

யாதானும் நாடுஆமால் ஊர்ஆமால் என்ஒருவன்
சாம்துணையும் கல்லாத வாறு



(குறள் : 397)


(யாதானும் = எதுவாயினும்; ஆம் = ஆகும்;
சாம் துணையும்
= சாகும் வரையிலும்)

கல்வி கற்றவனுக்கு அவன் செல்லும் நாடு எல்லாம் சொந்த
நாடாகும், செல்லுகிற ஊர் எல்லாம் அவனது ஊராகும். இதை
அறிந்தும் சாகும் வரையிலும் கல்வி கற்காமலிருக்கிறானே, அதற்குக்
காரணம் என்ன? என்று வினவுகிறார், வள்ளுவர்.

கல்வி கற்பதற்கு நாளும் கிழமையும் இல்லை. கற்பதற்கு வயது
வரம்பும் இல்லை. எல்லா நாளும் கல்விக்குரிய நாள்களே. எல்லாப்
பருவமும் கல்விக்குரிய பருவங்களே. கல்வியின் சிறப்பினை
உணரும் எவரும், அதைத்தம் வாழ்நாள் முழுமையும் பின்
தொடரத் தவறமாட்டார்கள்.

யாதானும் நாடு ஆகும் ஊர் ஆகும் என்ற உணர்வு தமிழ்ப்
பண்பாட்டின் உயர்ந்த நிலை தானே?


பயிற்சிக் குறிப்பு - I


தன் மதிப்பீடு : வினாக்கள் - I


1.


வள்ளுவர் கல்வியை ஏன் கண் என்று
சொல்லுகிறார்?

2.

கல்வி எவ்வாறு ஓர் அழியாச் செல்வமாக
இருக்கிறது?

3.

கற்பதனால் ஏற்படும் பயன்களாக வள்ளுவர்
கூறுவன யாவை?