சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
2.2 படிப்போம்

பாரதிதாசன் கவிதைகள்

கவிஞர் தமது கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவமே கவிதை. அக்கவிதையை மெருகேற்ற வெவ்வேறு இலக்கிய உத்திகளைக் கவிஞர்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வகையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்மீது கொண்ட காதலைக் கவிதை நயத்தோடு மிக அழகாக வெளிப்படுத்துவதைக் காணலாம்.

எங்கள் தமிழ்
தமிழ் எங்கள் உயிர் என்பதாலே – வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கு இப்புவி மேலே
தமிழ் என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்
தமிழ் குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்

தமிழுண்டு தமிழ் மக்களுண்டு – இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள்தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!
தமிழ் வளர்ச்சி
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாம் கண்டு

தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.

– பாவேந்தர் பாரதிதாசன்

பாடலின் பொருள்:

தமிழ் மொழி எங்களுக்கு உயிர் போன்றது. இவ்வுலகில் தமிழை உயிராகக் கொண்ட தமிழர்கள், மிக எளிதாக வெற்றி பெறுவர். தமிழ் என்பது, எமக்கு உயிர்ப்பொருளாகும். அத்தகைய இனிமை வாய்ந்த தமிழின் வளம் குறைந்தால், தமிழ்நாடு எங்கும் இருள் சூழும். தமிழ் உண்டு. தமிழ் மக்களும் உண்டு. ஆகையால், நாம் இன்பத்தமிழுக்கு நாளும் தொண்டு செய்வோம். தமிழ் எங்கள் மொழி என்று பெருமிதம் கொள்வோம். நல்ல தமிழ் வெல்ல வேண்டும் என நாள்தோறும் பாடி மகிழ்வோம்.

அனைவருக்கும் புரியும் எளிய நடையில் தமிழ் நூல்கள் எழுதப்பட வேண்டும். தமிழ் இலக்கண நூல்கள் புதிதாக இயற்றப் பட வேண்டும். உலகினில் புதிதாகத் தோன்றிய சிந்தனைகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் தமிழில் இடம்பெறச் செய்து தமிழைச் செழுமையாக்க வேண்டும். புதிய கலைச்சொற்களை உருவாக்குதல் வேண்டும்; தெளிவான படங்களோடு படநூல்கள் அமைத்தல் வேண்டும். வறுமையால் ஒரு தமிழர் படிக்கவில்லை என்று கூறினால் தமிழர்கள் அனைவரும் வெட்கப்படுதல் வேண்டும்.

நூலைப் பற்றி

’பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் கவிதைத்தொகுப்பில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளை எழுதிய பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். இவர் 1891 ஏப்ரல் 29 அன்று புதுவையில் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி. இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் எனச் சிறப்பிக்கப்படுகிறார். ‘குடும்ப விளக்கு’, ’இருண்ட வீடு’, ’தமிழியக்கம்’, ’பாண்டியன் பரிசு’, ’அழகின் சிரிப்பு’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

பொருள் அறிவோம்

1. தெளிவுறுத்தும் - விளக்கமாய்க் காட்டும்
2. சுவடி - நூல்
3. இயற்றுதல் - எழுதுதல்
4. நாணிடவும் - வெட்கப்படவும்