சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.4 தெரிந்துகொள்வோம்

இலக்கண வகைச் சொற்கள்

இலக்கண அடிப்படையில் சொற்கள் நான்கு வகைப்படும்.

1. பெயர்ச்சொல் 2. வினைச்சொல் 3. இடைச்சொல் 4. உரிச்சொல்

பெயர்ச்சொல்

பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் எனப் பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.

எ.கா :

பொருட்பெயர்

இடப்பெயர்

காலப்பெயர்

சினைப்பெயர்

பண்புப்பெயர்

தொழிற்பெயர்

புத்தகம்

சென்னை

மாதம்

கண்

வட்டம்

பாடுதல்

வினைச்சொல்

ஒரு செயலை அல்லது வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகும். ஒரு செயல் முடிவு பெற்றால் அது வினைமுற்று அல்லது முற்றுவினை எனவும், செயல் முடிவு பெறாமல் இருந்தால் அது எச்சவினை எனவும் வழங்கப்படும்.

வினைமுற்று

’ங்’ என்னும் மெய்யெழுத்து ’அ’ என்னும் உயிரெழுத்தோடு மட்டும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.

எ.கா : கேட்டான், பார்த்தான்.

எச்சவினை

எ.கா : கேட்டு, பார்த்து (வினையெச்சம்) கேட்ட, பார்த்த (பெயரெச்சம்)

இடைச்சொல்

தனித்து இயங்காமல் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வருவது இடைச்சொல் ஆகும்.

எ.கா : அவர், ஏ = அவரே (இங்கு ‘ஏ’ என்னும் எழுத்து இடைச்சொல்லாக வந்துள்ளது)

வேற்றுமை உருபுகளும் உவம உருபுகளும் ஏ, ஓ, யா முதலிய வினா எழுத்துகளும் சுட்டு எழுத்துகளும் இடைச்சொற்களாக வரும்.

எ.கா : அவளா பேசினாள்? இங்கு அவளா என்னும் சொல்லில் ‘ஆ’ என்னும் வினா எழுத்து இடைச்சொல்லாக வந்துள்ளது.

(அவள் + ஆ = அவளா)

உரிச்சொல்

செய்யுளுக்கு மட்டும் உரிய சொல் உரிச்சொல். இது இரண்டு வகைப்படும்.

1. ஒரே பொருள் தரும் பல உரிச்சொல்.

எ.கா : ‘மிகுதி’ என்னும் பொருளைத் தரக்கூடிய உரிச்சொற்கள் சால, தவ, உறு, நனி, கூர், கழி ஆகியன.

சாலச் சிறந்தது, தவச் சிறிது, நனி நன்று.

2. பல பொருள் தரும் ஓர் உரிச்சொல்.

எ.கா : ‘கடி’ என்னும் சொல்லானது காப்பு, கூர்மை, மணம், விரைவு, சிறப்பு, மிகுதி, புதுமை போன்ற பல பொருள்களைத் தரும்.