சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.4 தெரிந்துகொள்வோம்

வழுநிலை – வழாநிலை

நாம் பேசும்போதும் எழுதும்போதும் இலக்கண நெறியைப் பின்பற்ற வேண்டும். இதனை வழாநிலை என்பர். அந்நெறிகளிலிருந்து பிறழும்போது அதனை வழுநிலை என்பர். இப்பகுதியில் ஏழு வகைகளில் ஏற்படும் வழுநிலை குறித்தும் அவற்றின் வழாநிலை குறித்தும் காண்போம்

1. திணை

உயர்திணை/அஃறிணையைப் பயன்படுத்தித் தொடர் அமைக்கும்போது அத்திணைக்கு உரிய வினையைக் கொண்டுதான் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால் அது திணைவழுவாகும்.

வழு வழாநிலை
சான்று அக்கா வந்தது அக்கா வந்தாள்

2. பால்

ஐந்து பால்களுக்கு உரிய பெயர்கள் எழுவாயாகவோ வினை நிகழ்த்தும் பொருளாகவோ வரும்போது, அவற்றிற்கான வினை அவற்றிற்கு உரிய பாலில் அமையாமல் வேறு பாலில் அமைதல் வழுவாகும்.

வழு வழாநிலை
சான்று அறிஞர்கள் வந்தான் அறிஞர்கள் வந்தனர்

3. இடம்

மூவிடங்களில் ஒன்றின் இடத்திற்கு உரிய எழுவாய், சொற்றொடரில் இடம்பெறும்போது பயனிலை அதற்குரியதாக அமையாமல் வேறு இடத்திற்கு உரியதாக அமையுமானால் வழுவாகும்.

வழு வழாநிலை
சான்று நீ பாடினேன் நீ பாடினாய்

4. காலம்

ஒரு காலத்திற்குரிய வினையை வேறு காலத்தில் கூறுவது வழுவாகும்.

வழு வழாநிலை
சான்று நேற்றுச் சாப்பிடுவான் நேற்றுச் சாப்பிட்டான்

5. வினா

வினாவின் எழுவாயாக வரும் பெயர்களின் திணை, பால் ஆகியனவும் வினாப் பயனிலைகளில் வரும் திணை, பால் ஆகியனவும் மாறி வருதல் வழுவாகும்.

வழு வழாநிலை
சான்று அங்கே வருகிறவன் ஆணா? பெண்ணா? அங்கே வருபவர் ஆணா? பெண்ணா?

6. விடை

விடையில் இடம்பெறும் எழுவாயின் திணையும் பாலும் மாறுபட்டு வரும் விடைத் தொடர்கள் விடை வழுநிலைத் தொடர்கள் எனப்படும்.

வழு வழாநிலை
சான்று அங்கே வருகிறவன் பெண் அங்கே வருகிறவன் ஆண்

7. மரபு

முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினர் என அறியாமல், அதற்கு மாறுபட வழங்குவது மரபு வழுவாகும்.

வழு வழாநிலை
சான்று மயில் கூவியது மயில் அகவியது