சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 23
23.4 தெரிந்துகொள்வோம்

வினை வகைகள்

உலகம் செயல்களால் நிரம்பியது. செயல்களை வினை என்று இலக்கணம் கூறுகிறது. இந்த வினைகளைக் கொண்டு தொடர்களை அமைக்கிறோம். அவ்வினைவகைத் தொடர் எட்டு வகைப்படும். அவையாவன:

1. உடன்பாட்டு வினைத் தொடர்
3. செய்வினைத் தொடர்
5. தன்வினைத் தொடர்
7. நேர்க்கூற்றுத் தொடர்
2. எதிர்மறை வினைத் தொடர்
4. செயப்பாட்டுவினைத் தொடர்
6. பிறவினைத் தொடர்
8. அயற்கூற்றுத் தொடர்

இப்பாடப்பகுதியில் தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களைக் காண்போம்.

1. தன்வினை

எழுவாய், தானே செய்யும் செயலை உணர்த்துவது தன்வினைத் தொடர் எனப்படும்.

சான்று : கயல்விழி கற்றாள், வளவன் உண்டான்.

2. பிறவினை

எழுவாய் தானே செய்யாமல், அதேசமயம் அச்செயல் நடைபெறக் காரணமாக இருப்பதை உணர்த்துவது பிறவினைத் தொடர் எனப்படும்.

சான்று : கயல்விழி கற்பித்தாள், தாய் ஊட்டினாள்.

தன்வினை பிறவினை
பாண்டியன் பாடம் படித்தான் பாண்டியன் பாடம் படிப்பித்தான்
கனிமொழி உணவு உண்டாள் கனிமொழி உணவு உண்பித்தாள்
பொன்மணி மலர் சூடினாள் பொன்மணி மலர் சூட்டினாள்
ஆசிரியர் பாடம் கற்றார் ஆசிரியர் பாடம் கற்பித்தார்

3. செய்வினை

செய்பவனுக்கு முதன்மை அளிக்கும் வினை செய்வினை, எழுவாயே செயலைச் செய்வதாகக் கூறுவது செய்வினைத் தொடர் எனப்படும்.

சான்று : இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

பூங்குழலி இட்டலி அவித்தாள்.

4. செயப்பாட்டு வினை

செயப்படு பொருளுக்கு முதன்மை அளிக்கும் வினை செயப்பாட்டுவினை. செயப்படுபொருளை எழுவாயாகப் பெற்றும், எழுவாய் மூன்றாம் வேற்றுமை உருபைப் பெற்றும், பயனிலை ’படு’ என்பதைப் பெற்றும் வருகின்ற தொடர் செயப்பாட்டுவினைத் தொடர் எனப்படும்.

சான்று : சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது.

இட்டலி பூங்குழலியால் அவிக்கப்பட்டது.

செய்வினை செயப்பாட்டுவினை
கம்பர் இராமாயணத்தை இயற்றினார். இராமாயணம் கம்பரால் இயற்றப்பட்டது.
ஆசிரியர் மாணாக்கர்களை உருவாக்கினார். மாணாக்கர்கள் ஆசிரியரால் உருவாக்கப்பட்டனர்.
முதலமைச்சர் திட்டங்களைத் தொடங்கினார். திட்டங்கள் முதலமைச்சரால் தொடங்கப்பட்டன.
கவிஞர் நூலை வெளியிட்டார். நூல் கவிஞரால் வெளியிடப்பட்டது.
வேடன் வலை விரித்தான். வலை வேடனால் விரிக்கப்பட்டது.