சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
26.4 தெரிந்துகொள்வோம்

பா வகை அறிமுகம்

முற்காலத்தில் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவத்திலேயே எழுதப்பட்டன. சொல்ல வரும் கருத்துக்கேற்ற ஓசை வர வேண்டும் என்பதற்காகப் பா வகைகள் தோன்றின. அவை நான்கு வகைப்படும்.

இப்பாடப் பகுதியில் வெண்பாவின் இலக்கணம், ஆசிரியப்பாவின் இலக்கணம் குறித்து அறிந்துகொள்வோம்.

வெண்பா –இலக்கணம்

  1. கடைசி அடி மூன்று சீராகவும், பிற அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீராகவும் வரும்.
  2. இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்.
  3. இயற்சீரும் வெண்சீரும் பெற்று வரும்.
  4. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் பெற்று வரும்.
  5. கடைசிச் சீர் நேர் என முடிந்தால் நாள் வாய்பாட்டிலும், நிரை என முடிந்தால் மலர் என்னும் வாய்பாட்டிலும் முடியும். இதுபோலவே காசு, பிறப்பு வாய்பாடுகளும் பெற்றுவரும்.
சான்று:

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (குறள் : 664)

விளக்கம்:

  1. மேற்கண்ட வெண்பாவில் முதல் அடி நான்கு சீராகவும் இறுதி அடி மூன்று சீராகவும் அமைந்துள்ளன.
  2. இப்பாடல் இரண்டடிகளால் அமைந்துள்ளது.
  3. சான்றில் உள்ள பாடல் இயற்சீரையும் இயற்சீர் வெண்டளையும் பெற்றுவந்ததைக் கண்டுகொள்க.
  4. இப்பாடலில் ‘செயல்’ என்ற கடைசிச் சொல் ’நிரை’ என முடிந்திருப்பதால் ’மலர்’ வாய்பாட்டைப் பெற்றுள்ளது.
சொல் அசை சீர் தளை
சொல்/லுதல் நேர்/நிரை கூவிளம் விளம்முன்நேர் இயற்சீர் வெண்டளை
யார்க்/கும் நேர்/நேர் தேமா இயற்சீர் வெண்டளை
எளி/ய நிரை/நேர் புளிமா மாமுன்நிரை இயற்சீர் வெண்டளை
அரி/யவாம் நிரை/நிரை கருவிளம் விளம்முன்நேர் இயற்சீர் வெண்டளை
சொல்/லிய நேர்/நிரை கூவிளம் விளம்முன்நேர் இயற்சீர் வெண்டளை
வண்/ணம் நேர்/நேர் தேமா மாமுன்நிரை இயற்சீர் வெண்டளை
செயல் நிரை மலர்

வெண்பா வகைகள்

  1. குறள் வெண்பா
  2. சிந்தியல் வெண்பா
  3. நேரிசை வெண்பா
  4. இன்னிசை வெண்பா
  5. பஃறொடை வெண்பா

ஆசிரியப்பா (அகவற்பா)

  1. எல்லா அடிகளும் நான்கு சீர்களில் வரும்.
  2. ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  3. ஆசிரியத்தளை மிகுதியாக வரும்; வெண்டளை, கலித்தளைகளும் அருகி வரலாம்.
  4. மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும். ’ஏ’ என்ற எழுத்தில் முடித்தல் சிறப்பு. ஓ, ஈ, ஆய், என், ஐ ஆகிய ஈறுகளாலும் முடியும்.
சான்று:

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

(புறநானூறு:312)

ஆசிரியப்பாவின் வகைகள்

  1. நேரிசை ஆசிரியப்பா
  2. இணைக்குறள் ஆசிரியப்பா
  3. நிலைமண்டில ஆசிரியப்பா
  4. அடிமறிமண்டில ஆசிரியப்பா