சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.4 தெரிந்துகொள்வோம்

குறியீடு - படிமம் - தொன்மம்

புலவர் தாம் இயற்றும் பாடல்கள் சிறப்புற அமையப் பல்வேறு உத்திகளைக் கையாள்வர். அவற்றுள் குறியீடு, படிமம், தொன்மம் முக்கிய இடங்களைப் பெறுகின்றன. புதுக்கவிதைகளில் இவ்வகை உத்திகள் மேலோங்கி நிற்கின்றன.

குறியீடு

சொல்ல வந்த கருத்தை நேரடியாகச் சொல்லாமல் இன்னொன்றைக் கூறிக் குறிப்பால் உணர்த்துவது குறியீடாகும். குறியீடு என்பது அகம், புறம் என எல்லா வகைக் கவிதைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இலையுதிர்காலம் இல்லாமலேயே
உதிர்கின்ற உயர்திணை மரங்கள்

- ஈரோடு தமிழன்பன்

இக்கவிதையில் உதிர்கின்ற என்ற சொல் இறப்புக்குக் குறியீடாய் வருகிறது.

சமரச வேசமிட்ட குரங்கினிடம்
அப்பத்தைப் பறிகொடுத்த
பூனைகள் நாம்.

- அப்துல் ரகுமான்

ஏமாற்றுபவனுக்குக் குரங்கும், ஏமாறும் மக்களுக்குப் பூனைகளும் குறியீடாகும்.

படிமம்

படிமம் என்றால் காட்சி என்பது பொருள். விளக்க வந்த கருத்தைக் காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தியே படிமம் ஆகும். இது தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடையது.

கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்ணும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும்

- ந.பிச்சமூர்த்தி

இக்கவிதையில் ‘கிளி’ காட்சிப்படுத்தப்படுகிறது.

இன்னும்
உடையாத ஒரு
நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.

- பிரமிள்

இக்கவிதைகளைப் படிக்கும்போதே மனதில் காட்சி தோன்றுகிறதல்லவா!

தொன்மம்

தொன்மம் என்றால் பழங்கதை அல்லது புராணம் என்று பொருள். கவிதையில் பழங்கதை, வரலாறு, இதிகாசம், புராணத்தைத் துணையாகக் கொண்டு ஒரு கருத்தை விளக்குவதாகத் தொன்மம் அமைகிறது.

’இவன் சரியான சகுனி’
இங்கு சகுனி என்பது சூழ்ச்சியைத் தொன்மைப்படுத்துகிறது.
’நீ என்ன கர்ணனா?’
இங்கு கர்ணன் என்பது வள்ளல் தன்மைக்குத் தொன்மமாக அமைகிறது.
’அவன் பெரிய அரிச்சந்திரனா?’
இங்கு அரிச்சந்திரன் என்பது வாய்மைக்குத் தொன்மமாக அமைகிறது.

உன்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா?

- அப்துல் ரகுமான்

இக்கவிதையில் பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்கள்.