சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.2 படிப்போம்

ஆசிய ஜோதி

மானுடம் என்பது நாடு, மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்த மனித இனத்தின் பண்புகளையும் மாண்புகளையும் உள்ளடக்கியது. மானுடத்தின் சிறப்பே மனிதநேயமாகும். உலகம் அமைதியுடனும் அழகுடனும் திகழ மனிதநேயப் பண்பு இன்றியமையாததாகும். பிறப்பால் உயர்வு தாழ்வு கூடாது என்ற மனிதநேயப் பண்பை ’ஆசிய ஜோதி’ வழியே கவிமணி உணர்த்துகிறார்.

இடர் வரும்போதும் – உள்ளம்
இரங்கிடும் போதும்
உடன் பிறந்தவர்போல் – மாந்தர்
உறவு கொள்வர் அப்பா (பாடல் – 93)

ஓடும் உதிரத்தில் – வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் – சாதி
தெரிவ துண்டோ அப்பா (பாடல் – 94)

எவர் உடம்பினிலும் – சிவப்பே
இரத்தம் நிறமப்பா
எவர்விழி நீர்க்கும் – உவர்ப்பே
இயற்கைக் குணமப்பா (பாடல் – 95)

பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கைவேண்டும் அப்பா (பாடல் – 97)

- கவிமணி தேசிக விநாயகனார்

பாடலின் பொருள்

துன்பம் வருகிறபோதும் மற்றவருக்காக உள்ளம் இரங்கிடும்போதும் உடன்பிறந்தவர் போன்று மனிதர் உறவுகொள்வர். உடலில் ஓடும் இரத்தத்திலும் மக்கள் சிந்தும் கண்ணீரிலும் சாதி தெரிவது கிடையாது. எவர் உடம்பிலும் இரத்தம் சிவப்பு நிறமே. எவருடைய கண்ணீரும் உவர்ப்பே. பிறப்பின் அடிப்படையில் உலகில் யாருக்கும் பெருமை வராது. வாழ்வில் சிறக்க வேண்டுமென்றால் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். மனிதர்களுக்கிடையே பிறப்பு, சாதி, மதம் முதலியவற்றால் வேறுபாடுகள் இல்லாது சமத்துவம் நிலவ வேண்டும் என்பதைப் புத்தரின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார் கவிமணி.

நூலைப் பற்றி

‘லைட் ஆஃப் ஆசியா‘ என்னும் ஆங்கில நூலைத் தழுவி கவிமணி தேசிக விநாயகனார் எழுதியதுதான் ’ஆசிய ஜோதி’. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது. தேசிக விநாயகனார் 170 தேரூரில் பிறந்தவர். இவர் கவிமணி என்று அழைக்கப்படுகிறார். ’மலரும் மாலையும்’, ’உமர் கய்யாம் பாடல்கள்’, ’மருமக்கள்வழி மான்மியம்’ போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கவிமணியின் புகழைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.

பொருள் அறிவோம்

1. இடர் - துன்பம்
2. மாந்தர் - மனிதர்
3. உதிரம் - இரத்தம்
4. செய்கை - செயல்