புணர்ச்சிக்குப்பின் ஒன்றன்பின்னொன்றாக நிகழும் மூன்று வகை மெய்ப்பாடுகளுள் முதற்கண் நிகழும் மெய்ப்பாடுகளாவன:-- “பாராட் டெடுத்தன் மடந்தப வுரைத்தல் ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல் கொடுப்பவை கோடல்” என்னும் நான்குமாம். இரண்டாவதாக நிகழும் மெய்ப்பாடுகளாவன:-- “தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல் கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தல்.” என்னும் நான்குமாம். மூன்றாவதாக நிகழும் மெய்ப்பாடுகளாவன:-- “புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல் கையற வுரைதல்.” என்னும் நான்குமாம். இளம்பூரணர் இவைகளைப் புணர்ச்சி நிகழாதவழி நிகழும் பத்தவத்தைக்கண் உண்டாகும் மெய்ப்பாடு என்றும், அப்பத்துள் ஆறும் அகத்திணைக்கேயுரியவாதலின் அவற்றையே கூறினார் என்றுங் கூறுவர். மேற்கூறிய அறுவகை மெய்ப்பாடுங் களவுக்கேயுரியன. சில கற்பினும் வரும். சில கைக்கிளை பெருந்திணைக்கண்ணும் வரும். ஆற்றாமை மிக்கவிடத்து மெய்ப்பாடின்றியும் புணர்ச்சி நிகழும் என்க. இவையன்றி புணர்ச்சிக்கு நிமித்தமாய் களவு கற்பு என்னும் இரண்டற்கும் பொதுவான வேறுசில மெய்ப்பாடுகளுமுள. அவை “இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்” முதலாயினவாகும். இவையன்றி வரைந்தெய்தும் கூட்டத்திற்கு நிமித்தமான மெய்ப்பாடுகளுமுள. அவை முட்டுவயிற் கழறன் முதலியன. இன்னும் வரைந்தெய்தியபின் நிகழும் மெய்ப்பாடுகளுமுள. அவை தெய்வமஞ்சன் முதலிய பத்துமாம். இனி “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” என்னுஞ் சூத்திரத்துட் கூறிய ஒப்புமைக்குரிய மெய்ப்பாடுகள் பிறப்பு குடிமையாதியன. இவை மெய்ப்பாட்டால் உணரப்படுமென்பர் பேராசிரியர். இளம்பூரணர் தலைவன் தலைவி என்னும் இருவர்க் குரிய ஒப்புப்பகுதி என்பர். ‘நிம்புரி கொடுமை’ முதலியன |