முல்லை

248. முல்லை
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி,
5
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே!

பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்

321. முல்லை
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர,
கான முல்லைக் கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,
5
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை,
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை?
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக,
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற,
10
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே.

வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

343. பாலை
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
5
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,
படையொடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி-தோழி!-நத்துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
10
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே?

தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது.-கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்