அசுணம்

244. குறிஞ்சி
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
5
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ-
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்
தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ-
செய்யாய்: ஆதலின் கொடியை-தோழி!-
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
10
செயலை அம் தளிர் அன்ன, என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.

அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது.-கூற்றங்குமரனார்

304. குறிஞ்சி
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
5
புணரின், புணருமார் எழிலே; பிரியின்,
மணி மிடை பொன்னின் மாமை சாய, என்
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
10
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே.

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.- மாறோக்கத்து நப்பசலையார்