வாவல்

87. நெய்தல்
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
5
அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.

வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது.-நக்கண்ணையார்

218. நெய்தல்
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;
5
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி, இன்னும்
10
தமியேன் கேட்குவென் கொல்லோ,
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?

வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில் - காவிதிக் கீரங்கண்ணனார்

279. பாலை
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,
5
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப,
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து,
அதர் உழந்து அசையினகொல்லோ-ததர்வாய்ச்
10
சிலம்பு கழீஇய செல்வம்
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே?

மகட் போக்கிய தாய் சொல்லியது.-கயமனார்