- 22 -

இங்கு, ‘ஐப்பசி’ என்பதற்கு, ஐப்பசி அஷ்டமியென்று பொருள்கொண்டது, ‘ஐப்பசி மதியமுன்ன ரட்டமிப் பக்கம்’ என்னும் (யசோ.130-ஆம்) கவியை நோக்கி சிறப்பென்றது-திருவிழாவை; ‘சிறப்பொடு பூசனை செல்லாது‘ என்பது அறிக.  ‘ஒன்றலா‘ என்பது பலவகை என்றபடி.  ‘சிறப்பது‘ என்பதில் ‘அது,‘ பகுதிப்பொருள் விகுதி.                                              (11)

இதுவுமது

16.  நோவு செய்திடு நோய்பல வாக்கிடும்
  ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்
  தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்
  காவல் மன்ன கடிதெழு கென்றனர்.

(இ-ள்.) காவல்மன்ன-(எங்களைக்) காத்தலில் வல்லவனான அரசே, தேவி சிந்தை சிதைந்தனள் சீறும் ஏல்-சண்டமாரி மணம் வேறுபட்டு வெகுளுவாளாயின், நோவு செய்திடும் நோய் - (நம் உடலுக்குத்) துன்பந்தரும் நோய்கள், பல ஆக்கிடும்-பலவற்றையும் உண்டுபண்ணுவாள்;ஆவி கொள்ளும- உயிரையுங் கொள்ளைகொள்ளுவாள்; அலாதனவுஞ் செயும்-இவையல்லாத மற்ற எல்லாத்தீங்குகளையும் செய்வாள்;(ஆதலின்), கடிது எழுக-(அத்தேவியின் சிறப்புச் செய்தற்கு) விரைந்து புறப்படுவீராக, என்றனா-என்று கூறினர். (எ-று.)

நமக்குத் தீங்கு நேராவகை காத்தல் வேண்டி அத்தேவிக்குச் சிறப்புச்செய்ய விரைந்தெழுக என்றரென்க.

நோவுசெய்திடும், நோய் பலவாக்கிடும் என்று தனித் தனிவாக்கியமாகப் பொருளுரைப்பினு மமையும்.  அலாதன-பகை, போர், மழையின்மை முதலியன வாகும். சிதைந்தனள், முற்றெச்சம், ஏல் என்பது எனில் என்பதன் மரூஉ.  எழுகென்றனர், அகரம் தொகுத்தல் விகாரம்.     (12)