x

திருமுறையுள் ஐந்து திருப்பதிகம் பெற்ற ஐந்து தலங்கள் இருக்கும் ஏற்றமும், திருக்கச்சி மயாநம் என்று தனித்திருத்தலம் வாய்ந்த மாட்சியும் அதற்கென்று அமைந்த திருத்தாண்டகம் (மைப்படிந்த கண்ணாளும் தானும்) ஆகிக் கடவுளைக் காட்டும் பாட்டும், திருவேகம்பத்துள் இருக்கும் வெள்ளக் கம்பம் கள்ளக் கம்பம் நல்ல கம்பம் என்னும் முத்தலம் இத்தலத்திற்கே வாய்த்த உயர்வும் காஞ்சியின் கடவுட்டன்மைக்குச் சான்றாவன.

‘கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணலாமே’

என்னும் திருநாவுக்கரசர் திருத்தாண்டகத்தின் முடிவால், இக்காஞ்சியில் உள்ள தலமெல்லாம் பாடல் பெற்றவை என்றதும் அவற்றில் காட்சி தந்தருள்வான் கயிலாயநாதனே என்றதும் அறிந்து போற்றியுய்யுமா றுணர்த்தும்உண்மை.

ஆளுடைய நம்பி (சுந்தர மூர்த்தி சுவாமிகளு)க்கு இடக் கண்கொடுத்தருளிய விழுப்பமும் திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், ஐயடிகள் காடவர் கோ னாயனார் வீடு பெற்ற பீடும் இத்தலத்திற்கே உரியனவாகும்.

‘முத்தி தரும் நகரேழுள் முக்கியமாம் கச்சி’என்னும் முதுமொழியை அறியாதார் ஆர்?

‘இடையறுகாசி’ ‘இடையறாக் காஞ்சி’ என்னும் ஆட்சி இப்புராணத்தில் உண்டு. (காஞ்சி) என்றதன் இடையெழுத்து ஞகரமெய். அஃது அற்றது காசி, அறாதது காஞ்சி . இதனை, இடையறு காசி மூதூர் தன்னினும் இருமைசான்ற இடையறாக் காஞ்சி மூதூர் எம்பிராற்கு இனியது ஆகும் என்று பாடியருளினார். இடையொசி முலையாள்பாகன் கருணையால் எவர்க்கும் அவ்வூரிடை இடையூறு ஒன்று(ம்) இன்றி முத்திவீடு எளிதின் எய்தும் என்றும் அப்பகுதியை அடுத்துக் கூறியதால் காஞ்சியின் பெருமை நன்கு விளங்கும்.

காஞ்சியை நினைத்தாலும் காசியில் வாழ்ந்த பேறுண்டாகும்: ஆகவே காஞ்சியே எவற்றினுள்ளும் சிறந்தது, இவ்வாறு நான்முகன் கூறினான். அதை உணர்ந்து காஞ்சியில் வாழ்வோர் பாசம் நீங்கிப் பதியை அடைவர். (233-9) பரதகண்டமே கருமபூமியாகும் சிறப்புளது; எவ்வுலகினும் பரதகண்டமே மாட்சிமிக்கது. அக்கருமபூமியிற் கடவுளர் உறைவிடங்களே மேலானவை. அவற்றினும் மேன்மை சான்றவை திருமால் கோயில்கள். அவற்றினும் சாலச்சிறந்தவை மானுடலிங்கம் உள்ள திருக்கோயில்கள் , அவற்றினும் உயர்ந்தவை தேவலிங்கம் நிலவும் ஆலயங்கள். அவற்றினும் மிகச் சீரியவை சுயம்புலிங்கங்கள் துலங்கும் தளிகள். அவற்றிலும் காசிக்ஷேத்திரத்து விசுவநாதம் சிறந்தது. அதனினும் ஓங்கிய பாங்குளது காஞ்சிக்ஷேத்திரத்துத் திருவேகம்பம், அதனினும் உயர்ந்ததும் இல்லை. அதனொடு ஒப்பதும் இல்லை. காசி தன்கண் இறந்தால் முத்திநல்கும், அம்முத்தியும், சாரூபமே. சாயுச்சியம் அன்று. காஞ்சியை நினைப்பினும் சிவபிரான் திருவடிக்கலப்பாம் பேரின்ப வீடு