xxiii

அணிந்துரை திரு . எம். எல். சாரங்கபாணி முதலியார் அவர்கள், பி. ஏ. பி. எல் அறநிலைய ஆணையர், சென்னை.

சமய இலக்கியங்களில், தலபுராணங்கள் மிகவும் சிறப்பிடம் பெறுவன ஆகும். தலபுராணங்கள் , தமிழ்நலமும், கவிதை நயமும் அமைந்து திகழ்வன. நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பற்றிய பலதிறச் செய்திகளையும் உணர்ந்துகொண்டு மகிழ, அவைகள் நமக்குப் பேருதவி புரிகின்றன.

சமயக் கருத்துக்களையும், தத்துவ நுட்பங்களையும், வாழ்வியல் அனுபவ உண்மைகளையும் , நம் முன்னோர்களின் உள்ளுணர்ச்சித் திறங்களையும் பிறவற்றையும் , தலபுராணங்களால் அறிந்துகொண்டு, நாம் மிகவும் பயன்பெறுகின்றோம் . அவைகளில் அமைந்துள்ள கவிதை....இலக்கிய..... .அறிவுச் செல்வம் அளப்பரியது. அவைகளை இயற்றியருளிய கவிஞர்கள், நம்மனோரின் பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள் ஆவர்.

தலபுராணங்களில் காஞ்சிப்புராணம் தலைசிறந்ததொன்று. கவிதை நலத்திலும், கற்பனைத் திறத்திலும், உயரிய கருத்துக்களை அழகுற உணர்த்தும் சிறப்பிலும், காஞ்சிப்புராணம் கவின்மிக்குத் திகழ்கின்றது. எளிய இயற்கை வருணனைப் பகுதிகளிலும்கூட , அரிய பெரிய சைவ சித்தாந்த தத்துவ நுட்பங்களை அழகுற விளக்கிச் செல்வது காஞ்சிப்புராணம் என்று தமிழறிஞர்கள் அதனைச் சாலவும் போற்றிப் புகழ்வர்.

பிற்காலப் பெருங்கவிஞர்களில் புகழோங்கிய ஒருவராகப் பிறங்கிய மாதவச் சிவஞான சுவாமிகள், தம் கலைப்புலமை யெல்லாம் ஒருங்கே களிநடம் புரிந்து பொலியும்படி இந்நூலை இயற்றியருளியிருக்கின்றார்கள் என்பதொன்றே, இந்நூலின் சிறப்பினை அறிவிக்கப் போதியதாகும்.

இத்தகைய புகழ்சான்ற இனிய இந்நூலுக்கு, யாவரும் எளிதிற் படித்து இன்புறும்வண்ணம் சிறந்ததொரு பொழிப்புரையினை, அறிஞர் திரு. பொன். சண்முகம் அவர்கள் எழுதி வெளியிட முன்வந்தமை மிகவும் பாராட்டி மகிழ்தற்குரியது . இவர் வழிவழியாக வந்த செந்தமிழ்ப் புலமையும், சிவநேயச் செல்வமும் மிக்கவர். அடக்கமே ஓர் உருவமானவர், சைவ சித்தாந்த நூல்களில்

ஆழ்ந்த பயிற்சியுடையவர். கச்சியப்ப முனிவர் இயற்றிய காஞ்சிப்புராணம் இரண்டாம் காண்டத்தினை, முன்னரே குறிப்புரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டிருப்பவர் . இவர்தம் தந்தையார் சீலத்திரு. பொன். குமாரசாமி அடிகள், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள் அவர்களின் அன்பையும்