xxvi

இரண்டு வினையால் விளைந்த - வகை
             இரண்டையுங் காட்டிஎன் சென்னியின் மீதே
இரண்டு சரணமும் சூட்டி - அஞ்சில்
             இரண்டை இரண்டில் அடக்கவல் லாராம்

ஆனந்தம் ஆனந்தம் தோழி. 2

2. இரண்டுவினை -- நல்வினை தீவினை. வகை இரண்டு -- இன்பத் துன்பங்கள். அஞ்சில் இரண்டை இரண்டில் அடக்கல் -- சிவாய நம என்னும் திருவைந் தெழுத்தில் மகரத்தைச் சிகரத்திலும் நகரத்தை வகரத்திலும் அடக்கல்.

மூன்றுல கும்படைப் பாராம் -- அந்த
              மூன்றுல கும்முட னேதுடைப் பாராம்
மூன்று கடவுளா வாராம் -- அந்த
              மூன்று கடவுளர் காணவொண் ணாராம்

ஆனந்தம் ஆனந்தம் தோழி. 3

நாலு வருணம்வைப் பாராம் -- பின்னும்
            நால்வகை ஆச்சிர மங்கள்வைப் பாராம்
நாலுபா தங்கள்வைப் பாராம் -- அந்த
            நாலுக்கு நாலு பதமும்வைப் பாராம்

ஆனந்தம் ஆனந்தம் தோழி. 4

4. நாலுபாதம் -- சைவாகமங்களின் உளவாகிய சரியை கிரியா யோக ஞானபாதங்கள். நாலுபதம் -- சாலோக சாமீப்பிய சாரூப்பிய சாயுச்சியங்கள்.

அஞ்சு மலமஞ் சவத்தை -- பூதம்
              அஞ்சுதன் மாத்திரை அஞ்சிந் திரியம்
அஞ்சு தொழிலஞ்சு மாற்றி -- எழுத்(து)
             அஞ்சும் அஞ்சாக அமைக்கவல் லாராம்

ஆனந்தம் ஆனந்தம் தோழி. 5

5. மலம், அவத்தை, தூலபூதம், சூக்குமபூதம், பொறி, ஆற்றுந் தொழில், திருநாம எழுத்து என்பவற்றை ஐந்தைந்தாக அமைத்துள்ளமையை எடுத்தோதியபடி.

ஆறாறு தத்துவக் கூட்டம் -- உடன்
             ஆறத்து வாக்களும் ஆதார மாறும்
ஆறுகுற் றங்களும் நீங்க -- இரண்(டு)
             ஆறின் முடிவில் நடனஞ்செய் வாராம்

ஆனந்தம் ஆனந்தம் தோழி. 6

6. இரண்டாறின் முடிவு -- முடியின்மேல் பன்னிரண்டங்குலம் அருவமாயுள்ள சுழுமுனையின் முடிவெனப்படும் துவாதசாந்தம்: இது மீதானம் எனவும்படும்.