xxvii

ஏழு புவனப் பரப்பும் -- கடல்
          ஏழுஞ் சிகரிகள் ஏழும் பெருந்தீ(வு)
ஏழுப் பிறவிகள் ஏழும் -- இசை
           ஏழும் படைத்த இறைவ ரிவராம்
 

ஆனந்தம் ஆனந்தம் தோழி. 7

7. பெருந்தீவு ஏழு:- நாவலந்தீவு, சாகத் தீவு, குசத்தீவு, கிரௌஞ்சத்தீவு, சான்மலித் தீவு, கோமேதகத்தீவு, புட்கரத்தீவு என்பன.

உலகம் ஏழு:- பூலோகம், புவலோகம், சுவலோகம், மகலோகம், சனலோகம், தவலோகம் , சத்தியலோகம் என்பன.

  எட்டு வடிவமா வாராம் -- அந்த
             எட்டு வடிவுக்கும் எட்டரி யாராம்
எட்டுக் குணமுடையாராம் -- பத்தி
             எட்டும்உடையோரிதயத்துளாராம்
 

ஆனந்தம் ஆனந்தம் தோழி. 8

8. எட்டுவடிவம் :- மண், புனல், தீ, காற்று, வெளி, ஞாயிறு, நிலவு, உயிர் என்பன . இவை இறைவனுக்கு வடிவங்களாம். எட்டுக்குணம்:- முற்றுணர்வு, வரம்பிலின்பமுடைமை , இயற்கையுணர்வுடைமை, இயல்பாகவே பாசங்களினீங்குதல், தன்வயமுடைமை , பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, தூயவுடம்பினனாதல் என்பன .

எண்வகைப்பத்தி:- அடியார் பத்தி, சிவபூசை கண்டு மகிழ்தல், சிவார்ச்சனை, சிவார்ப்பணம் செய்தல், சிவபுராணம் கேட்டல், பரவசமாதல், சிவனடிமறவாமை, பொய்வேடமின்மை .

  ஒன்பதும் ஒன்பதும் ஒன்றும் -- மற்றை
             ஒன்பதும் முப்பதும் ஒன்பதும் ஒன்றும்
ஒன்பதும் ஒன்பதும் ஒன்றும் -- பின்னும்
            ஒன்பதும் ஆனவைக் கப்புறத் தாராம்
 

ஆனந்தம் ஆனந்தம் தோழி. 9

9.தத்துவங்கள் முப்பத்தாறும் தத்துவிகங்கள் அறுபதுமாகிய தொண்ணூற்றாறனையும் கடந்த நிலையினன் முதல்வன் என்றபடி. 19+49+19+9=96 எனக் கணக்கிட்டுக் கண்டுகொள்க.

  பத்துத் திசையுடை யாராம் -- பத்துப்
           பத்துப்பத் தாந்திருப் பேருடை யாராம்
பத்துக் கரமுடை யாராம் -- தவம்
            பத்தினில் ஒன்றுபத் தாகச்செய் வாராம்
 

ஆனந்தம் ஆனந்தம் தோழி. 10