திருமறைப் போக்கினின்று பிறழ்ந்து பொருளிடர்ப்பாடு ஏற்படாவண்ணம் கவிதையை நடத்திச் செல்லுவது புலப்படுகின்றது. கதைப் போக்கு நிகழ்ச்சிகளைக் கூறுமிடத்து ஆசிரியர்க்குத் தம் விருப்பம் போல் விளக்கிச் செல்வதற்குரிய உரிமையிருந்தும், மூலத்தினின்று சிறிதும் வழுவாமல் செல்வதுங் குறிப்பிடத்தக்கது. மொண்டு நிரப்பினரே தீர்த்தமதால் மூவிரண்டு ஜாடிகளும் பூரணமாய்க் கொண்டு போய்க்கொடுங் குறைவேதும் வராதே பந்தியைவி சாரணைசெய் மாந்திரிடம் கொண்டு போய்க்கொ டுத்தனரன் னோனிடமே மாருசியே கொண்ட அந்தக் கந்தரசம் கண்டவரோ ஈதுபணி யாட்களாமால் கண்டவரோ றாருமில்லை வந்தவிதம். இவ்வாறு மூலத்தை யொட்டியே செல்லும் ஆசிரியர் ஆங்காங்கே தகுந்த விடங்களில் கவிஞருக்கே யுரித்தான தம் உணர்ச்சிகளையும் வெளியிடத் தவறவில்லை. எடுத்துக் காட்டாக இயேசுபெருமான் திருவவதாரக் காட்சியிலீடுபட்டுப் பரவசமடைந்த ஆசிரியர் சில பாடல்களைத் தம் உணர்ச்சி வெளியீடாகப் பாடியுள்ளமையைக் குறிப்பிடலாம். என்னோஇவ் வற்புதம்பார் ஈசனிங்கே வந்தார் புவியில் என்னோஇவ் வற்புதம்பார் எம்முருவம் கொண்டா ரன்றோ என்னோஇவ் வற்புதம்பார் இந்நிலைமை யோயா னாரே என்னோஇவ் வற்புதத்தை எப்படிமறப் பாயோ பாவி? என்ற இப்பாடல் அவற்றில் ஒன்றாகும். அது போன்றே ஜெய காண்டத்தில் வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த கிறிஸ்துபெருமானை வானவர் பாடியதாகக் காணப்பெறும் பாடல்கள் கவிஞரின் கற்பனைத் திறத்திற்கோர் எடுத்துக்காட்டாகும். ஆசிரியர், கவிஞர் மட்டுமல்லர் போதகருமாவார் என்ற உண்மை: ருசியெதுமே யற்றதொரு தண்ணீரே ருசிமிகுந்த நல்லரச மானதுபோல் ருசியதே யிழந்ததான யூதமதம் ருசிமிகவே யுள்ளதாகச் செய்வரென ருசியெதுமே யற்றவராம் பாவியரை சுசிருசியே யுள்ளவராய் மாற்றியுமே ருசிமிகவே யுள்ளவராய்ச் செய்வரென ருசிசெயுமோர் நல்விடய மாயினதே. என்னும் பாடலால் பெறப்படுகின்றது.
|