நளவெண்பா

அரும்பொருள்கள், கற்பாரைத் தம்மிடத்தே ஈர்த்து, என்பைவும் உருக்கி இன்பம் பெருக்கும் நீர்மையன; கலை மாண்ட கேள்வி வல்லார் கவியானதால், வான் துறைகள் பல வாய்ந்து திகழ்வன; எண்வகைச் சுவைகள் இசைந்து இன்பம் பயப்பன; வற்றாவளம்; இன்ப ஊற்று; சுரந்துசுரந்து துன்பம் நீக்கும் துவ்வா மருந்து; அமிழ்து; அறியாமை வேடை யகற்றும் அரிய மழை; இம்மழை அறிவுப் பயிரை வளர்ப்பன; ‘நவில்தொறும் நூல் நயம் போலும்’ என்னும் பொய்யா மொழியை என்றும் பொய்யா மொழியாக்கும் பொற்புடையன. இவைகளில் பயிர்வோர், ‘வேறொருவர் வாய்க் கேட்ப நூலுளவோ?’ என்னுமாறு சிறப்புமிக்கன. அவைகள் ஒவ்வொன்றையும் இத்தகைத்து; இந்நீர்மையது; சிறந்தது; பண் பிற்று; வண்மைத்து எனக் கட்டுரைப்பதாயின், இடம் போதா; ஏடும் விரியும்; ஆகலான், இந்நூலைக் கற்கப் புகுவார்க்கு அவ்வவ் விடங்களைத் தேர்ந்து தெளிதற்கு வாய்ப்பாக ஒரு சிலவற்றை ஈண்டுக் காட்டிச் சென்று ஆற்றுப்படுத்துவாம்.

இந்நூல், பாக்களுள் முதன்மை வாய்ந்ததான வெண்பாவால் ஆக்கப்பெற்றது. அஃது இயற்கையாகப் பேசுவதுபோல் எழும் செப்பலோசையுடையது; சங்ககாலப் புலவர்கள் மிகுதியாகக் கையாண்ட நீர்மையது ; திட்ப நுட்பம் மிக்கது ; அறநூல் புதுக்கிய திருவள்ளுவரும் சிற்றளவானதான குறள் வெண்பா என்னும் இப்பாவகையினாலே அறமுறைகளை அமைத்து அடக்கிக் கூறினார். இத்தகைய வெண்பாவினுள், தம் நுண்மாண் நுழைபுலநலனால் நேரிசை வெண்பாக்களால் இந்நூலை யாத்துத் தந்துதவினர்.

(i) உவமத் திறம் :

‘வினைபயன் மெய்உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்’

எனத் தொல்காப்பியர் கட்டுரைத்த வினை, பயன், மெய், உருவம் என்னும் நால்வகை உவமத்தையும் அழகுறச் சித்திரித்துக் கற்பார் நெஞ்சங் கரைந்துருகுமாறு திட்ப நுட்பஞ் செறிய அமைத்துக் காட்டியிருக்கும் ஒட்பம், பேரின்ப தருவதாய் அமைந்துள்ளமை காண்மின். இவற்றுள் வினை உவமமாவது தொழில் பற்றிய-செயல் பற்றிய நிலையைக் கூறும் உவமமாகும். அது:

தமயந்தி நளன்பாற் பெருங் காதல் கொள்கின்றாள். அதனால் அவள் கண்களுக்க நளன் உருவம், உருவெளி (பொய்யுரு)த் தோற்றமாக வெளிவருகின்றது. அதை உண்மையுருவ மெனக்கொண்டு கலக்கமடைகின்றாள். அதனால் அவள் கண்ணிற் கருமணி போன்று, ஒரு நாளும் பிரியாது, உயிர்போன்று பழகிய