முன்னுரை
 

திருக்குறளில் உள்ள  காதல் கருத்துகளை  அமைத்துக்  கட்டுரைகள்
எழுதித்தருமாறு சுதேசமித்திரன் வார இதழைச் சார்ந்தோர் கேட்டார்கள்,
அவர்களின் விருப்பப்படி 1955,  56-ஆம்  ஆண்டுகளில் தொடர்ந்து சில
கட்டுரைகள்  எழுதினேன், பிறகு  அந்தக்   கட்டுரைகளைத்  தொகுத்து
நூலாக்க  வேண்டும்  என்ற நோக்கத்தோடு  சேர்த்து  வைத்திருந்தேன்;
சேர்த்துவைத்த   தொகுதி  எவ்வாறோ  சிதைந்து  குறையுடையதாயிற்று,
மீண்டும் சேர்த்துத் தொகுக்க நேரம் இன்றி முயற்சியை விட்டிருந்தேன்.

தமிழ்   எழுத்தாளர்  கூட்டுறவுச்   சங்கம்  அமைந்த  பிறகு அதன்
செயலாளர்  நண்பர் திரு, க, சோமசுந்தரம்  அடிக்கடி  என்னைக் கண்டு
தமிழ் உறவுப் பதிப்பாக வெளியிட ஒரு நூல்  தருமாறு  கேட்டு வந்தார்,
யான்  தயங்கிவந்தேன்,  அவருடைய  அன்பு   வென்றது,  மேற்குறித்த
கட்டுரைகளை   நூலாக   வெளியிடலாம்   என்று   கூறி,   சிதைவால்
இழந்துபோன   சில   கட்டுரைகளைப் பற்றிக் குறிப்பிட்டேன், மித்திரன்
அலுவலகத்திற்குச்   சென்று   தக்க   ஏற்பாடு   செய்து  இழந்தவற்றை
எழுதுவித்துக் கொணர்ந்தார், மகிழ்ந்து  நன்றி  கூறினேன்,  அவருடைய
தூண்டுதலும் உதவியும் இல்லையேல் இந்நூல் இப்போது வெளிவந்திராது,
அவர்தம் நல்லுதவியைப் போற்றுகிறேன்.

மு, வரதராசன்